புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இந்த வகையில் நாடகப் பயிற்சிப் பட்டறை மூலம் சிறுவர்களைப் பயிற்றுவித்து கலாநிதி சி.மௌனகுருவீன் 'வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்' நாடகம் 1991 இல் முதலில் தயாரிக்கப்பட்ட போது சிறுவர்களின் ஊக்கமும், தமிழ் உச்சரிப்பும் திருப்தி தருவதாக இருக்கவில்லை. தொடர்ந்தும் நாடகத்தை மேடையேற்றி நல்ல வரவேற்பைப் பெற்றபின்னர், அடுத்த வருடம் 'தப்பி வந்த தாடி ஆடு' நாடகம் தயாரிக்கப்பட்ட போது கூடுதலான சிறுவர்கள் பங்குபற்றினர். அவர்களுடைய ஆக்கத் திறமைகளுக்கும் இடம்கொடுத்து, பயிற்சிப் பட்டறைகளில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அரங்க விளையாட்டுகளுடன் தயாரிக்கப்பட்ட போது மிகவும் நல்ல வரவேற்பு சிறுவர்களிடத்தும், பார்வையாளர்களிடத்தும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, 'நம்மைப் பிடித்த பிசாசுகள்' நாடகத்தில் சில காட்சிகளை சிறுவர்களையே உருவாக்கும்படி கேட்டு, அக்காட்சிகள் இறுதி நாடகத்திலும் அங்கமாக்கப்பட்டது. இது ஒரு நல்ல உத்தியாகப்பட்டது. பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் எழுதிய 'மலைகளை அகற்றிய மூடக் கிழவன்' நாடகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அழகு தமிழில் பேசி நடித்தனர். இந்நாடகத்தில் நாட்டார் இசை, கூத்து ஆகியன கையாளப்பட்டன. சிறுவர்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்புக் குறித்தும் அரங்க இசை உறவு குறித்தும் மூத்த தமிழ் அறிஞர் சோ. சிவபாதசுந்தரம் கன்றைஸ் தமிழ் வானொலி விமர்சனத்தில் விதந்து குறிப்பிட்டுள்ளார். 36 சிறுவர்களுடன், நம்மவர் பிரச்சினையில் அந்நியரைப் புகவிட்டால் விளையும் விபரீதத்தை - இரு பூனைகளின் அப்பத்தை ஒரு குரங்கு பங்கிட முற்பட்டு, தானே உண்டுவிட்ட கதையை வைத்து - 'அயலார் தீர்ப்பு' என்ற நாடகம் 1997 இல் மேடையேறியுள்ளது. இச் சிறுவர் நாடகங்கள் பல தடவைகள் லண்டனில் மேடையேற்றம் கண்டபோதும் மீண்டும் மீண்டும் நல் வரவேற்பைப் பெறுகின்றன.
7. முடிவுரை :
"அராஜகத்தின், வன்முறையின் வலிமையான கூறுகள் மனிதனின் அன்றாட வாழ்வில் புதைந்து போய் இருக்கிறது. போலித்தனங்களும், சகிப்புணர்ச்சியின்மையும் வன்முறையும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவிப்போயுள்ளன. மனிதன் சக மனிதன் மீது பலாத்காரம் மேற்கொள்பவனாக, அடிமைத்தனத்தைத் திணிப்பவனாக, சுரண்டுபவனாக, வதைகளின் பேரில் மகிழ்ச்சி கொள்பவனாகக் காணப்படுகிறான். போலித்தனமான வீராப்புகளை வெளிப்படுத்துகிறான். தன்னை வல்லுனனாகக் கண்டு சுயதிருப்தி அடைகிறான். ஏனையோர் தன்னிலும் குறைவானோர் என்று அகமகிழ்ந்து போகிறான். பிறரை அவமரியாதைப் படுத்துவதில் பூரண திருப்தி கொள்கிறான். விலங்கிடுகிறான். சித்திரவதை செய்கிறான். கொலைகளில் ஈடுபடுகிறான். மனிதனே மனிதனுக்கு ஓநாய் மாதிரி ஆகிவிட்டான். மனிதன் ஒரு காட்டுமிராண்டித் தனமான மிருகமாக மாறிவிடுகிறான்" என்று சிக்மன்ட் பிராய்ட் தனது Civilization and Discontent என்ற நூலில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைக்குரியன.
மூலதனத்தின் பிறப்பினை விபரிக்கப் புகுந்த கார்ல் மாக்ஸ், பணம் இந்த உலகுக்கு வந்து சேர்ந்தபோது அதன் ஒரு கன்னத்தில் பிறப்போடுகூடிய இரத்தக்கறை படிந்திருக்கிறது என்று கூறினார். மூலதனமானது தலையில் இருந்து கால்வரை ஒவ்வொரு மயிர்தொளையிலும் ரத்தமும் அசுத்தமும் பீறிடத்தான் அறிமுகமாகியது என்கிறார். பொருளாதாரத்திலும், அரசியலிலும், சமூக வாழ்விலும், தனிமனித உறவிலும், குடும்ப அமைப்பிலும், ஆண்பெண் உறவிலும் வன்முறை ஊடுருவிப் போயுள்ளது. சில இடங்களில் வெளிவெளியாக அதுதான் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில் மிகவும் பூடகமாக செயற்படுகிறது. அமுக்கப்பட்ட நிலையில், வெளியில் தெரியாத வகையில் இந்த வன்முறைகள் செயற்படும் முறைகள் சிக்கல் மிகுந்தன. தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழக நாடகங்களிலும் இந்த உள்ளார்ந்த வன்முறையில் பல்வேறுபட்ட பரிமானங்கள் கலாபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித வாழ்விலும், சமூகவாழ்விலும் நாம் காணும் இந்த வன்முறை தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழக நாடகங்களில் ஊடுபாவாக இழைந்து வந்திருக்கிறது. உதாரணத்திற்கு சில:
கார்சியா லோர்க்காவின் 'ஒரு பாலை வீடு' குடும்ப அமைப்பிற்குள் போலித்தனமும், வெற்றுக் கௌரவங்களும் மனிதாபிமான உணர்வுகளைச் சிதைத்து எவ்வளவு வன்முறையோடு செயற்படுகிறது என்பதை நான்கு பக்கமும் இருண்ட சுவர்களுக்குள் சித்தரித்துக் காட்டுகிறது. தாய் பெர்னாடா அப்பாவின் குடும்ப ஆதிக்கப் போக்கிலும் அவளுக்கும் அவளது முதிர்கன்னிகளான மகள்மாருக்கும் இடையிலான உணர்வுகளிலும், மகள்களுக்கு இடையிலான உறவுகளிலும் ஆதிக்க வன்முறைகளின் வெளிப்பாடுகளை அவதானிக்க முடிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், கலைக், நாடகம், தயாரிக்கப்பட்ட, குடும்ப, போது, புலம்பெயர், நல்ல, நாடக, மனிதன், பிரச்சினைகளும், வளர்ச்சியும், அரங்கு, நாடகக், கட்டுரைகள், மீண்டும், தனிமனித, வாழ்விலும், வன்முறை, இடையிலான, அவைக்காற்றுக், செயற்படுகிறது, குறித்தும், உறவிலும், திருப்தி, வகையில், கலைகள், arts, drama, பயிற்சிப், சிறுவர்களின், மிகவும், அரங்க, சிறுவர்கள், வரவேற்பைப், நாடகத்தில்