புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
ஈழத்து கலாசாரத் தளம் தமிழகத்தைவிட காத்திரமானது. இலங்கையின் பொதுவான கல்வி வளர்ச்சி காரணமாகவும் ஈழத்துத் தொடர்பு சாதனங்கள் தென்னிந்தியாவைப்போல வணிகமயப்பட்ட சந்தை நோக்கை இலக்காகக்கொண்ட மலிந்த ரசனைக்கானதாக இல்லை. ஊர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், சினிமாபாணி நாடகங்கள், அதீத உணர்ச்சிப் பாங்கான நாடகங்கள் ஆங்காங்கே மேடையேற்றப்படும்போது, மக்களின் கவனத்தை நேரடியாக ஈர்ப்பதில் தடைகள் எதுவும் இல்லை. புலம்பெயர் சூழலிலும் ஈழத்துத் தமிழர்களே பெரும்பான்மையாக லண்டனில் வசிகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் லண்டனில் சிறுபான்மையாகவே காணப்படுகின்றனர். இருந்தபோதும், தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம், இலங்கையில் உருவாக்கிய ரசிகப் பரம்பரையை முற்றாக இழந்த நிலையில் லண்டனில் முற்றிலும் புதிய ஆரம்பமாகவே அமைந்தது.
5. லண்டனில் தமிழ் அவைக்காற்று கலைக்கழக ஆரம்பம் :
ஈழத்தில் நாடக மேடையேற்றத்தில் கொண்டிருந்த அனுபவங்களும் புலம்பெயர் மண்ணில் சந்திக்கநேர்ந்த நாடகக் கலைஞர்களும், ரசிகர்களும் லண்டனில் கழகத்தின் நாடக இயக்கத்திற்கு ஆதாரசக்திகளாக அமைந்தன. புதிய மண், புதிய சூழல், முற்றிலும் புதிய வாழ்க்கை முறைகள். எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக முட்டி மோதிசெய்துபார்த்தே கண்டறிய வேண்டிய நிலைமை. எளிதாகச் சென்றடைவதற்கு பாதைகள் எதுவும் இருக்கவில்லை.
வாழ்க்கைப் பொருளாதாரப் போராட்டம் புலம்பெயர்ந்த இடத்தில் அனைவருக்குமே பொதுவான பிரச்சினையாக அமைந்தன. அயராத உழைப்பை வேண்டி நின்ற குடும்பக் கட்டமைப்புகள். இந்த நெருக்கடியான சூழலின் மத்தியிலும் அவர்கள் மத்தியில் சுரந்த நாடக உணர்வு, நாடக அமைப்பின் வெற்றிக்கு ஆதாரசுருதியாக அமைந்தது. நாம் பின்பற்றிச் செல்ல முன்மாதிரியான ஒரு நாடக அமைப்பு லண்டனில் நிலை கொண்டிருக்கவில்லை. சமூக உணர்வும், அரசியல் ஆர்வமும், இலக்கிய ஈடுபாடும் மிகுந்த குறுகிய எண்ணிக்கையினரே பரஸ்பரம் சந்தித்துக்கொண்ட சூழல். அந்நியச் சூழலில் கலந்திருந்த வெறுமையைத் துடைத்திடும் வேகத்தோடு இந்தச் சிறு குழுவினர் இணைந்து 1983-84 இல் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகளே இந்நாடக இயக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது.
5.1 லண்டனில் தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் முதலாவது நிகழ்ச்சி :
தமிழியல் நூல் வெளியீட்டு நிதிக்காக முதலாவது லண்டன் நிகழ்ச்சியாக 09.11.85 இல் 'மழை', 'பார்வையாளர்கள்' என்ற இரு நாடகங்கள் மேடையேறின. நாடகக் கலைகென்றே முற்றுமுழுதாக லண்டனில் நிகழ்ந்த முதலாவது தமிழ்க் கலைநிகழ்ச்சி இது. நூல் வெளியீட்டுத் துறையுடனும், சிறு சஞ்சிகை வெளியீட்டுடனும் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் இலங்கையில் இருந்தே கொண்டிருந்த தொடர்பின் தொடர்ச்சியான ஒரு மரபாக இது அமைந்தது. (புதிசு, சமம், அபிவிருத்தி நோக்கு, ஆறு நாடகங்கள் என்ற யாழ் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்ற நூல் வெளியீடு, நுட்பம் என்ற மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் சங்க மலர் வெளியீடு, மற்றும் வைகறை வெளியீடு, அலை வெளியீடு ஆகியன)
"லண்டனில், பலவழிப்பட்ட இளைஞர் அண்மையில் ஒன்றுகூடி இலங்கைத் தமிழ்க் கலை வளர்ச்சிக் குன்றலைப் பேசியதன் விளைவே 'மழை', 'பார்வையாளர்கள்' என்ற இரு நாடகங்கள். இவ்விரு நாடகங்களின் மேடையேற்றமும் தமிழியல் புத்தக வெளியீட்டு நிறுவன நிதிக்காக எனக் குறிக்கப்பட்ட போதும், இந்நாடகம் பயின்றவர்கள் ஒவ்வொருவரினதும் கடின உழைப்பு மணித்தியாலங்களின் நிதிச்சமன்பாடு, நுழைவுக் கட்டணமாகப் பெற்றிருக்கக்கூடிய தொகையினைத் தாண்டி நிற்கும். ஆகவே நிதி திரட்டல் மாத்திரமே இந்நாடக மேடையேற்றியவர்களின் நோக்கமாகாது". (8)
சீரிய நாடகத்துடனான பரிச்சயத்தை, புலம்பெயர் சமூகத்தில் ஆரம்ப முன்னெடுப்பாக இந்த நாடகங்கள் மேடையேறின எனக் குறிப்பிடலாம். சுமார் 400 ரசிகர்கள் மண்டபம் நிறைய வந்திருந்தனர். நுழைவுக்கட்டணமாக மூன்று பவுண்கள் அறவிடப்பட்டன. இந்த மேடையேற்றத்தில் கிடைத்த நிதியினைக்கொண்டு மட்டக்களப்புக் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் 'நீர் வளையங்கள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நாடக நிகழ்ச்சியை விளம்பரம் செய்ய வசதிகள் இருக்கவில்லை. லண்டனில் சிதறி வாழும் தமிழர்களுக்கு நிகழ்ச்சி குறித்துத் தெரிவிப்பதற்கு, தமிழர்கள் கூடும் ஒரே பொது மையம் இந்துக் கோயில்கள் மட்டுமே. தமிழிலேயே துண்டுப்பிரசுரங்களும், நாடக நிகழ்ச்சி மலரும் அச்சிட முடிவு செய்யப்பட்டது. தற்காலத்தில் போல, கனினியில் தமிழ் கிடையாது. இலங்கையில் வெளியாகும் வீரகேசரி, தினகரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில் இருந்து (அதுவும் அப்போது லண்டனுக்கு வருவது குறைவு) ஒவ்வொரு எழுத்தாக வெட்டி எடுத்து ஒட்டியே துண்டுப் பிரசுரமும் நாடக மலரும் அச்சாகின. அக்காலத்தில் தமிழர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்திலேயே அறிவித்தல்களும், துண்டுப் பிரசுரங்களும், மலர்களும் பிரசுரிப்பது வழமை. (தற்போதும் பெரும்பான்மை அப்படித்தான்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, லண்டனில், நாடகங்கள், தமிழ், புலம்பெயர், நாடகக், வெளியீடு, நூல், அவைக்காற்றுக், இலங்கையில், நிகழ்ச்சி, பிரச்சினைகளும், வளர்ச்சியும், அரங்கு, கலைக், கட்டுரைகள், முதலாவது, அமைந்தது, நிதிக்காக, இந்நாடக, வெளியீட்டு, தமிழியல், தமிழ்க், தமிழர்கள், மலரும், துண்டுப், எனக், பல்கலைக்கழக, மேடையேறின, சிறு, பார்வையாளர்கள், மேடையேற்றத்தில், ஈழத்துத், இல்லை, எதுவும், பொதுவான, கலைகள், drama, arts, கலைக்கழகம், முற்றிலும், சூழல், இருக்கவில்லை, அமைந்தன, இயக்கத்திற்கு, கொண்டிருந்த, கழகத்தின், இலக்கிய