ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.089.தனி
5.089.தனி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1944 | ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம் ஒன்று கீளுமை யோடும் உடுத்தது ஒன்று வெண்தலை யேந்தியெம் உள்ளத்தே ஒன்றி நின்றங் குறையு மொருவனே. |
5.089.1 |
வெண்தலை ஒன்று ஏந்தி எம் உள்ளத்தே ஒன்றிநின்று அங்கு உறையும் ஒருவனாம் இறைவன் வெண் பிறையாகிய கண்ணி ஒன்று உடையவன்; உமையோடும் உடுத்தது ஒரு கிழிந்த கோவண உடை.
1945 | இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில் இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள் இரண்டு மில்லிள மானெமை யாளுகந் திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே. |
5.089.2 |
அவர்க்கு உள்ளனவாகிச் செய்யுந்தொழில்கள் இரண்டு; அவர்க்கு உள்ளனவாகிய கோலங்கள் இரண்டு; எமை ஆளாகக்கொண்டு உகந்து இரவும் பகலும் என் சிந்தையுள் தங்கியிருக்கும்.
1946 | மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் மூன்று மாயின மூவிலைச் சூலத்தன் மூன்று கண்ணினன் தீத்தொழின் மூன்றினன் மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே. |
5.089.3 |
மும்மூர்த்திகளுள் நின்று இயலுகின்ற தொழில் மூன்றும் உடையவன்; மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவன்; மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றுடையவன்; மூன்றுபொழுதும் என் சிந்தையுள் மூழ்கியிருப்பான்.
1947 | நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல் நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம் நாலு வேதஞ் சரித்தது நன்னெறி நாலு போலெம் அகத்துறை நாதனே. |
5.089.4 |
எம் உள்ளத்து உறையும் இறைவன் நான்கின் மேலும் ஒருமிகைமுகமாகிய பிரமனது ஐந்தாவது முகத்தைச் சினந்தவன்; நிலைபெற்ற ஆல நிழலில் நன்கு உணர்ந்திட்ட வேதங்கள் நான்கினை உடையவன்; இன்பமாகிய நான்கு வேதங்களையே குதிரைகளாகக் கொண்டவன்; நல்ல நெறி சரியை முதலிய நான்கு ஆகும்.
1948 | அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை அஞ்சு போலரை யார்த்ததின் தத்துவம் அஞ்சு மஞ்சுமோ ரோரஞ்சு மாயவன் அஞ்சு மாமெம் அகத்துறை யாதியே. |
5.089.5 |
என் அகத்து உறை ஆதி. ஆனைந்து ஆடி. ஐந்தொழில் நடனம் ஆடி. இடையில் ஐந்தலை அரவார்த்தவன் அவன். தத்துவங்களாகிய இருபத்தைந்தின் கூறானவன்.
1949 | ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன ஆறு சூடிய அண்ட முதல்வனார் ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள் ஆறு போலெம் அகத்துறை யாதியே. |
5.089.6 |
எம் உள்ளத்துறையும் முதல்வனாகிய பெருமான், ஆறு கால்களையுடைய வண்டு ஒலிக்கும் கொன்றையை உடையவன்; கங்கையாற்றைச் சடையிற் சூடிய அண்டங்களுக்கெல்லாம் முதல்வன்; கூரிய அறிவுடைய அறுவகைச் சமயத்தார்க்கு அச்சமயப் பொருளும் நெறியும் ஆயவன்.
1950 | ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல் ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம் பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல் ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே. |
5.089.7 |
ஏழுமலை ஏழுபுவனம் ஏழ்கடல் போற்றும் இராவணனது ஏழிசைகேட்டு அருள்செய்தவன். அவன் திருவடிகள் எழுபிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன.
1951 | எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில் எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே. |
5.089.8 |
அட்டமூர்த்தியாய்த் தொழில் செய்பவன். எண்குணன். எம் இறைவனாயுள்ள அவ்வெட்டுமூர்த்தி என்னுள்ளத்து எட்டும் மூர்த்தியாய் ஒடுங்கியிருப்பன்.
1952 | ஒன்ப தொன்பதி யானை யொளிகளி றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே. |
5.089.9 |
எண்பத்தொரு பதங்களில் பேசப்படுபவன். பதினெண் சிவகணங்கள் அல்லது எண்பத்தொரு யானைகள் சூழப்பெற்றவன். உடலிடத்துள்ள ஒன்பது வாயிலும் தீத்தொழிலிற் சேராதவாறு ஒன்பது ஒத்து எனக்குள் ஒடுங்குவான்.
1953 | பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல் பத்து நூறவன் பல்சடை தோள்மிசை பத்தி யாமில மாதலின் ஞானத்தால் பத்தி யானிடங் கொண்டது பள்ளியே. |
5.089.10 |
அளவற்ற பெருமையன். சிவகணங்கள் பல்லாயிரவரை உடையவன். அடியவர் உள்ளங்களையே தங்குமிடமாகக் கொண்டவன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.089.தனி , உடையவன், மூன்று, ஒன்று, இரண்டு, அஞ்சு, சிந்தையுள், எட்டு, திருமுறை, அகத்துறை, நாலு, ஒன்ப, பத்தி, மஞ்சுமோ, பத்து, கொண்டவன், நான்கு, யாதியே, அவன், நூறவன், மூர்த்தியு, ளொடுங்குமே, மூர்த்தியாய், ஒன்பது, எண்பத்தொரு, சூடிய, சிவகணங்கள், கண்ணினன், வெண்தலை, உள்ளத்தே, உறையும், உடுத்தது, திருச்சிற்றம்பலம், ஐந்தாம், தேவாரப், பதிகங்கள், இறைவன், மாமவர்க், நின்றிய, லுந்தொழில், தொழில், அவர்க்கு, போதுமென், குள்ளன, கோலங்கள், போலெம்