ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.088.திருமருகல்
5.088.திருமருகல்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்.
தேவியார் - வண்டுவார்குழலி.
1934 | பெருக லாந்தவம் பேதைமை தீரலாம் திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருக லாம்பர மாயதோ ரானந்தம் மருக லானடி வாழ்த்தி வணங்கவே. |
5.088.1 |
மருகல் இறைவன் திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம்; அறியாமை தீரலாம்; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம்; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப் பருகலாம்.
1935 | பாடங் கொள்பனு வல்திறங் கற்றுப்போய் நாடங் குள்ளன தட்டிய நாணிலீர் மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்திரு வேடங் கைதொழ வீடௌ தாகுமே. |
5.088.2 |
பாடங்கொண்ட நூல் திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே!மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும் உமக்கு எளிதாகும்.
1936 | சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை அனைத்து நீங்கிநின் றாதர வாய்மிக மனத்தி னால்மரு கற்பெரு மான்திறம் நினைப்பி னார்க்கில்லை நீள்நில வாழ்க்கையே. |
5.088.3 |
கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை.
1937 | ஓது பைங்கிளிக் கொண்பா லமுதூட்டிப் பாது காத்துப் பலபல கற்பித்து மாது தான்மரு கற்பெரு மானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே. |
5.088.4 |
இப்பெண் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப் பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத் தொடங்குகின்றாள்.
1938 | இன்ன வாறென்ப துண்டறி யேனின்று துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும் மன்னு தென்மரு கற்பெரு மான்திறம் உன்னி யொண்கொடி யுள்ள முருகுமே. |
5.088.5 |
நிலைபெற்ற அழகிய மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள்; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர் மல்குகின்றாள்; இதனைத் தீர்ப்பது இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான்.
1939 | சங்கு சோரக் கலையுஞ் சரியவே மங்கை தான்மரு கற்பெரு மான்வரும் அங்க வீதி யருகணை யாநிற்கும் நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே. |
5.088.6 |
பெண்களே! தன் சங்கு வளையல்கள் நெகிழவும், உடை சரியவும் இம்மங்கைதான், மருகல் இறைவன் திருவீதியுலாவருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள்; நான் இதற்கு என்னசெய்வேன்?
1940 | காட்சி பெற்றில ளாகிலுங் காதலே மீட்சி யொன்றறி யாது மிகுவதே மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத் தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே. |
5.088.7 |
என் பெண் மாட்சிகள் நிறைந்த மருகற்பெருமானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள்; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும் காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது.
1941 | நீடு நெஞ்சுள் நினைந்துகண் நீர்மல்கும் ஓடு மாலினோ டொண்கொடி மாதராள் மாடம் நீள்மரு கற்பெரு மான்வரில் கூடு நீயென்று கூட லிழைக்குமே. |
5.088.8 |
நெஞ்சுக்குள் நீள நினைந்து கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண், மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன் வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள்..
1942 | கந்த வார்குழல் கட்டிலள் காரிகை அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக வந்தி டாய்மரு கற்பெரு மானென்று சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே. |
5.088.9 |
மணம் வீசும் நீண்ட கூந்தலை முடியாதவளாய் இப்பெண், மால்விடையோடும் மிக்க அன்பாய் "மருகற்பெருமானே! வந்திடாய்!" என்று சிந்தித்து வாராமையாற் பின்னும் திகைப்பாள்; காண்பீராக.
1943 | ஆதி மாமலை யன்றெடுத் தானிற்றுச் சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும் ஆதி யான்மரு கற்பெரு மான்திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கு மும்பரே. |
5.088.10 |
ஆதியிற்றோன்றிய திருக்கயிலாயத் திருமலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் "சோதியே" என்று கூறுதலும், பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.088.திருமருகல் , கற்பெரு, இறைவன், மருகல், திருமுறை, இப்பெண், சிந்தை, மான்திறம், திருமருகல், நீர்மல்கும், நினைந்து, இன்ன, தூது, ஐந்தாம், கண்ணீர், சங்கு, வாழ்பவர், கூடு, பெண், அங்க, மானுக்குத், கற்பித்து, கற்றுப்போய், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், வாழ்த்தி, திருத்தலாம், மாடங்கள், மருகற், தீரலாம், பலபல, நின்று, தேவாரப், தான்மரு