ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.033.திருச்சோற்றுத்துறை
5.033.திருச்சோற்றுத்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
1396 | கொல்லை யேற்றினர் கோளர வத்தினர் தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார் தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. |
5.033.1 |
அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.
1397 | முத்தி யாக வொருதவஞ் செய்திலை அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. |
5.033.2 |
அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணிசெய்வாயாக.
1398 | ஒட்டி நின்ற உடல் சார்ந்த உறு நோய்வினை கட்டி நின்ற கழிந்தவை போயறத் தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே பட்டி யாப்பணி செய்மட நெஞ்சமே. |
5.033.3 |
அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக.
1399 | ஆதியா னண்ட வாணர்க் கருள்நல்கு நீதி யானென்றும் நின்மல மேயென்றும் சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. |
5.033.4 |
அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளாவாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக.
1400 | ஆட்டி னாயடி யேன்வினை யாயின ஓட்டினாயொரு காதி விலங்குவெண் தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. |
5.033.5 |
அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினையணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக.
1401 | பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப் பங்கி உண்டதோர் தெய்வமுண் டோசொலாய் தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத் தங்கி நீபணி செய்மட நெஞ்சமே. |
5.033.6 |
அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணிசெய்வாயாக.
1402 | ஆணி போலநீ ஆற்ற வலியைகாண் ஏணி போலிழிந் தேறியு மேங்கியும் தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. |
5.033.7 |
அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இழிந்தும் ஏறியும் இறங்கியும் வாடுகின்றனை; பிறவிப் பெருங் கடற்குத் தோணியாகிய சோற்றுத்துறையர்க்குப் பூணியாக நின்று பணிசெய்வாயாக.
1403 | பெற்ற மேறிலென் பேய்படை யாகிலென் புற்றி லாடர வேயது பூணிலென் சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே பற்றி நீபணி செய்மட நெஞ்சமே. |
5.033.8 |
அறியாமையை உடைய நெஞ்சமே! ஏற்றினை ஏறினாலென்ன, பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக.
1404 | அல்லி யானர வைந்தலை நாகணைப் பள்ளி யானறி யாத பரிசெலாம் சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே புல்லி நீபணி செய்மட நெஞ்சமே. |
5.033.9 |
அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக.
1405 | மிண்ட ரோடு விரவியும் வீறிலாக் குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே உண்டு நீபணி செய்மட நெஞ்சமே. |
5.033.10 |
அறியாமையை உடைய நெஞ்சமே! அமண்முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக.
1406 | வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான் சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத் தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே. |
5.033.11 |
அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.033.திருச்சோற்றுத்துறை , நெஞ்சமே, சோற்றுத், செய்மட, உடைய, அறியாமையை, பணிசெய்வாயாக, துறையர்க்கே, நீபணி, என்றும், யாய்ப்பணி, நின்று, நின்ற, திருமுறை, திருச்சோற்றுத்துறை, நீயென்றுஞ், பொங்கி, துறையர்க்குத், சொல்லி, சோற்றுத்துறையர்க்கே, உண்டு, சூழ்ந்த, அறிய, தாழ்ந்து, செய்திலை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், ஐந்தாம், உடையவரும், ஆகிய, சோற்றுத்துறைப், தொட்டு, ஒட்டி, பெருமானுக்கு