ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.032.திருப்பூந்துருத்தி
5.032.திருப்பூந்துருத்தி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்.
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
1386 | கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக் கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார் பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர் அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.1 |
பல கொடிகள் எடுக்கப்பெற்றதும், திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும், மணமிக்க பூம்பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1387 | ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப் பார்த்த னோடு படைதொடு மாகிலும் பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த் தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.2 |
தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேடவடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும், பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1388 | மாதி னைமதித் தானொரு பாகமாக் காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப் பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க் காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.3 |
உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும், சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும், பூதங்களுக்குத் தலைவனும், பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1389 | மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம் காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன் பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த் தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.4 |
முப்பெருங்கடவுளராயும், அவருள் முதல்வனாயும், இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும், கடிய காலனைக் காய்ந்தவனாயும், அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் தலைவனாக எழுந்தருளியிருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1390 | செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில் உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும் பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர் நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.5 |
நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும், பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும், செம்பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1391 | வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக் கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான் புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச் செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.6 |
வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம்.
1392 | ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும் பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த் திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.7 |
ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று, பெரிய பாம்பும், மதியும், கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
1393 | அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர் கருத நின்றவர் காண்பரி தாயினான் பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச் சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.8 |
அதிரர், தேவர் இயக்கர், விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும், நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும், சரியை முதலிவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக்கீழ் நாம் இருக்கப் பெற்றோம்.
1394 | செதுக றாமனத் தார்புறங் கூறினும் கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும் பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க் கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.9 |
குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம்.
1395 | துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப் பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம் பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப் படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
5.032.10 |
தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும், அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும், கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.032.திருப்பூந்துருத்தி , கீழ்நா, மிருப்பதே, சேவடிக், பூந்துருத், பூந்துருத்தி, பெற்றோம், சேவடிக்கீழ், நாமிருக்கப், பெருமான், நகரத்து, எழுந்தருளியிருக்கும், உள்ள, திருமுறை, ஆகிய, கூறினும், திந்நகர்த், திருப்பூந்துருத்தி, அவன், கங்கையும், பேசினும், அதிரர், கொடிய, திந்நகர்ச், நாம், பிடித்த, கண்ணெலாம், நீங்காத, ஐந்தாம், பேசிக், பெருமானின், இருப்பினும், பதிகங்கள், உடைய, பூத்த, திருச்சிற்றம்பலம், பூசிய, தேவாரப், நாயகன், தேசத்தில், தேவன், காலனைக், திந்நகர்க், திந்நகர்