ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.021.திருவின்னம்பர்
5.021.திருவின்னம்பர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
1275 | என்னி லாரு மெனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே. |
5.021.1 |
என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான்; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.
1276 | மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணா கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே. |
5.021.2 |
கள்ளுண்பவர்களும், பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை? தட்டி முட்டித் தள்ளாடிவிழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ?
1277 | கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே. |
5.021.3 |
கண்ணியும் கொன்றையும், தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர், அனல், சூலம், மான் மறி கூடிய கையை உடையவர், என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும்.
1278 | மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான் அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக் குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே. |
5.021.4 |
மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின்அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன்.
1279 | தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன் மன்ன வன்மதி யம்மறை யோதியான் முன்ன மன்னவன் சேர்வன பூழியான் இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே. |
5.021.5 |
தென்னவனும், எனையாளும் சிவனும், மன்னவனும், மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகத்தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும், ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான்.
1280 | விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில் அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே. |
5.021.6 |
அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும், தன்னடியார் மனத்து அன்பினைஅளப்பவனும். தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொளவேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன்.
1281 | சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் படைக்க ணால்பரு கப்படு வான்நமக் கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே. |
5.021.7 |
கங்கையாள் சடைக்கண் உள்ளாள்; அவன் கையது அனல். அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க, இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன்; நமக்கு துன்பக் காலத்துப் பற்றக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன்.
1282 | தொழுது தூமலர் தூவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே. |
5.021.8 |
தூமலர்களைத் தூவித் தொழுது, துதித்து, நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும், வாளாபொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன்.
1283 | விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை புரியுங் காமனை வேவப் புருவமும் திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந் தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே. |
5.021.9 |
வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இளவேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன்,நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே.
1284 | சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரண மென்கொலோ இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே. |
5.021.10 |
நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே! சனியும், ஞாயிறும், வெள்ளியும், திங்களுமாகிய கோள்களைமுனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.021.திருவின்னம்பர் , ரீசனே, இன்னம்பர், வின்னம்ப, ஈசனே, தின்னம்ப, திருமுறை, மென்மனத், திருவின்னம்பர், இன்னம்பரில், நமக்கு, ஈசனேயாவன், ஐந்தாம், வேண்டியே, இன்புற்ற, நின்ற, தொழுது, சனியும், ஞாயிறும், நோக்கிய, மும்மதில், தூவித், குறிக்கொள, ஈசன், பார்கள், தட்டி, அவன், திருச்சிற்றம்பலம், என்னைவிட, என்னுள்ளே, முட்டித், எட்டு, அனல், என்னி, தேவாரப், பதிகங்கள், சூடும், தன்னடி