ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.020.திருக்கடம்பூர்
5.020.திருக்கடம்பூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடேசுவரர்.
தேவியார் - சோதிமின்னம்மை.
1265 | ஒருவ ராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழக னுறைவிடம் பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ் கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.1 |
ஒருவராய், இருவராய், மூவராய் நிற்பவனும் குருவடிவுமாகிய குழகன் உறைவிடம், பருத்த வரால் மீன்கள் குதித்தலைக் கொள்ளும் பழனங்கள் சூழ்ந்த இடமாகிய கடம்பூர்க்கரக்கோயிலே.
1266 | வன்னி மத்தம் வளரிளந் திங்களோர் கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன் பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும் மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.2 |
வன்னியும், ஊமத்தமலரும், வளர் இளந்திங்களும், கங்கையும் ஆகியவற்றைக் கதிர்விரிக்கும் முடியில் வைத்தவன், பொன்னின் நிறைந்து புணர்முலையாளாகிய உமாதேவியோடும் கடம்பூர்க் கரக்கோயிலில் நிலைபெற்றவன் ஆவன். (எல்லாம் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்தருள்கின்றான் என்பது கருத்து.)
1267 | இல்லக் கோலமு மிந்த இளமையும் அல்லற் கோல மறுத்துய வல்லிரே ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே. |
5.020.3 |
இல்லத்திற்கொள்ளும் கோலங்களும், இந்த இளமையுமாகிய அல்லற் கோலங்களை அறுத்துஉய்ய வல்லமை உடையீராவீர்; அதற்குக் கடம்பூர்நகர்ச் செல்வக் கோயிலாகிய கரக்கோயிலை விரைந்து சென்று அடைந்து தொழுவீர்களாக.
1268 | வேறுசிந்தை யிலாதவர் தீவினை கூறு செய்த குழக னுறைவிடம் ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும் ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.4 |
தம்மைப்பற்றியன்றி வேறு சிந்தனை இல்லாதவர்களது தீவினைகளைக் கூறு செய்யும் குழகன் உறைவிடம், செல்வம் ஏறுகின்ற தேவர்கள் தொழுகின்ற ஆறு சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.
1269 | திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர் மங்கை தங்கும் மணாள னிருப்பிடம் பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும் தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.5 |
இடப்பாகத்தே பார்வதியைக் கொண்டதன்றி, திங்கள் பொருந்திய செஞ்சடை மேலும் ஒரு மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம், மணல் நிறைந்த பகுதியில் புன்னையும், புலிநகக் கொன்றையும், தென்னையும் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.
1270 | மல்லை ஞாலத்து வாழு முயிர்க்கெலாம் எல்லை யான பிரானா ரிருப்பிடம் கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.6 |
வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்கட்கெல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம், முல்லை, கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.
1271 | தளரும் வாளர வத்தொடு தண்மதி வளரும் பொற்சடை யாற்கிட மாவது கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக் களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.7 |
நெகிழும் இயல்புடைய ஒளிபொருந்திய அரவத்தொடு, தண்மதி வளர்கின்ற பொன்னிறம் உடைய சடையார்க்கு இடமாவது, கிளர்கின்ற பேரொலி உடைய கின்னரம் பாட்டறாத களர் நிலத்தைச் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.
1272 | உற்றா ராயுற வாகி யுயிர்க்கெலாம் பெற்றா ராய பிரானா ருறைவிடம் முற்றார் மும்மதி லெய்த முதல்வனார் கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.8 |
உற்றாராய், உறவாகி உயிர்க்கெலாம் ஈன்றாராகிய தலைவர் அறிவிற் குறைபாடுடைய முப்புராதிகளின் எயில்களை எய்தமுதல்வனார் உறைவிடம் கற்றார்கள், வாழும் கடம்பூர்க் கரக் கோயிலாகும்.
1273 | வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம் உள்ள மாய பிரானா ருறைவிடம் பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான் கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.9 |
திருநீறணிந்த மேனியவர்க்கெல்லாம் உள்ளத்தில் விளங்கும் தலைவனும் வெண்பிறை சூடிய சென்னியானும் ஆகிய பெருமான் உறைவிடம் கடம்பூரில் உள்ள கள்வன்சேர்ந்த கரக்கோயிலாகும்.
1274 | பரப்பு நீரிலங் கைக்கிறை வன்அவன் உரத்தி னாலடுக் கல்எடுக் கல்லுற இரக்க மின்றி யிறைவிர லாற்றலை அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. |
5.020.10 |
நீர்ப்பரப்புச் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனாகிய இராவணன் தன் ஆற்றலினால் திருக்கயிலையை எடுக்கத் தொடங்க இரக்கமின்றிச் சிறிது விரலாற்றலையினை அரக்கினவன் இடம் கடம்பூர்க்கரக்கோயில்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.020.திருக்கடம்பூர் , கோயிலே, பூர்க்கரக், கடம்பூர்க், சேர்கடம், கரக்கோயிலாகும், உறைவிடம், திருக்கடம்பூர், பிரானா, திருமுறை, நல்ல, வாழும், மல்லிகை, பொருந்திய, தலைவர், முல்லை, இருப்பிடம், தண்மதி, உள்ள, வெண்பிறை, சூடிய, ருறைவிடம், உடைய, புன்னையும், பேரொலி, கின்னரம், ஆகிய, செஞ்சடை, சூழ்ந்த, வைத்தவன், பொன்னின், குழகன், பதிகங்கள், குழக, னுறைவிடம், கொள்ளும், னான்கடம், தேவாரப், திங்கள், திருச்சிற்றம்பலம், மங்கை, ஐந்தாம், கூறு, அல்லற், செல்வக், தங்கும்