நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.103.திருவாரூர்
4.103.திருவாரூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
986 | வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் |
4.103.1 |
தொண்டர்களே! வேம்பு போன்ற கசப்பான சொற்களையே பேசி, இவ்வூன் உடம்பைப் பாதுகாத்து, வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கின்றீர்களே! ஆம்பற் பூக்கள் நிறைந்த பொய்கைகளை உடைய ஆரூரை உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.
987 | ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன் நீராற் றிருவிளக் கிட்டமை நீணா |
4.103.2 |
அடியார்களின் அன்புமிக்க நறிய உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித் தொண்டனும் தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பிநந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர் எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி நடத்தினனாய், நீரை வார்த்துத் திருவிளக்குக்களை எரிய விட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.
988 | பூம்படி மக்கலம் பொற்படி மக்கல ஆம்படி மக்கல மாகிலு மாரூ தாம்படி மக்கலம் வேண்டுவ ரேற்றமிழ் நாம்படி மக்கலஞ் செய்து தொழுதும் |
4.103.3 |
மடநெஞ்சமே! எம்பெருமானுடைய திருமேனிக்கு உரிய ஆபரணங்களைப் பொன்னால் செய்து அணிவிப்பர். அஃது இயலாவிடின் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற உலகியற்படி அத்திருமேனியைப் பொன் அணிகளால் அழகுறுத்துவது போலப் பூவாலும் அழகு செய்வர். திருவாரூரில் இனிது அமர்ந்த பெருமானார் தம் திருமேனிக்கு அணிகலன்கள் வேண்டுவராயின் நாம் தமிழ்ப் பாமாலைகளால் அவருக்கு அணிகலன்கள் செய்த அணிவித்து அவரை வணங்குவோம்.
989 | துடிக்கின்ற பாம்பரை யார்த்துத் துளங்கா முடித்தொண்ட ராகிமுனிவர் பணிசெய்வ பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த அடித்தொண்ட னந்தியென் பானுள னாரூ |
4.103.4 |
துள்ளுகின்ற பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றி நிலை கலங்காத பிறையைச்சூடி, மேம்பட்ட தொண்டர்களாகி முனிவர்கள் திருத்தொண்டுகளைச் செய்வதோடன்றி, திருநீற்றைப்பூசி வந்து சேரும் அடியவர்களுடைய திருவடிகளைத் தன் தலைமேல் கொள்ளும் அழகினோடு கீழான தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பி நந்தியும் ஆரூரில் அமுதம் போன்றுள்ள பெருமானுக்குச் சிறப்பான தொண்டுகளைச் செய்யும் அடியவனாக உள்ளான்.
990 | கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கொர் இரும்பு பிடித்தவ ரின்புறப் பட்டா அரும்பவித் தண்பொழில் சூழணி யாரூ விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை |
4.103.5 |
அரும்புகள் மலரும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் விரும்பு உறையும் பெருமானே! கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால் சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா? நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று அடியேன் உன்பால் வேண்டுவேன்?
991 | கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவ ரெய்தியு அடிகளு மாரூ ரகத்தின ராயினு பொடிகொண் டணிவார்க் கிருளொக்கும் நந்தி |
4.103.6 |
கொடிகளும், மேற்கட்டிகளும், பறை, கவரி, சங்கு, கைவிளக்கு என்பனவும் கொண்டு குறைவற்ற செல்வர் பலர் திருவாரூரை வழிபடுதலுக்கு வந்து சேருவர். ஒரு குறைவும் இல்லாத திருமூலத்தானப் பெருமானாரும் திருவாரூரில் அமர்ந்திருப்பர். எனினும் அழகிய வெண்ணீற்றை அணியும் அடியவர்களுக்கு, நம்பு நந்தியடிகள் ஆரூரகத்தில் இல்லாமல், ஊருக்கு வெளியே செல்வாராயின் திருவாரூரில் ஒளியே இல்லை போலத் தோன்றும்.
992 | சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் குங்குலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன றங்குலி வைத்தா னடித்தா மரையென்னை |
4.103.10 |
தொண்டர்களே! விடியற்காலையில் தூப மூட்டியில் உள்ள கனல் எரியில் குங்கிலியத்தை இட்டுக் குங்கிலியப் புகைக் கூட்டினை எம் பெருமானுக்குக் காட்டிச் சங்குகளை ஊதுங்கள். தன் இருபது தோள்களையும் கயிலையில் அதனைப் பெயர்ப்பதற்குச் செயற்படுத்தின இராவணனுடைய இரத்தம் ஓடுமாறு தன் கால்விரல் ஒன்றனை அழுத்தி நெரித்தவனுடைய திருவடித் தாமரைகளே அடியேனை அடிமைகொண்டன. அவை நுமக்கும் அருள் செய்யும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.103.திருவாரூர் , திருவாரூரில், திருவாரூர், திருமுறை, வந்து, செய்து, பொன், அணிகலன்கள், கொள்ளும், கவரி, விரும்புகின்றாயா, உன்னால், செய்யும், திருமேனிக்கு, திருவடித், பதிகங்கள், தேவாரப், நான்காம், திருச்சிற்றம்பலம், பேசி, பங்குனி, தொண்டுகளைச், தொண்டர்களே, மக்கலம்