மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.051.திருஆலவாய்
3.051.திருஆலவாய்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
3339 | செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே |
3.051.1 |
நடுநிலைமை உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக. பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
3340 | சித்த னேதிரு வாலவாய் மேவிய அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர் பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே |
3.051.2 |
எல்லாம் வல்ல சித்தரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளிய தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக. ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
3341 | தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச் சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர் பக்க மேசென்று பாண்டியற் காகவே |
3.051.3 |
சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த திருஆலவாய்ச் சொக்கரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக. இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
3342 | சிட்ட னேதிரு வாலவாய் மேவிய அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள் துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர் பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே |
3.051.4 |
நீதிநெறி தவறாதவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அட்டமூர்த்தி வடிவானவரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக! கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற வைத்த நெருப்பு கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
3343 | நண்ண லார்புர மூன்றெரி யாலவாய் அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே |
3.051.5 |
பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! என்னை அஞ்சேல் என்று அருள்செய்வீராக. சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள் இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது பண்ணிசையோடு தமிழ் வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
3344 | தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் அஞ்ச லென்றரு ளாலவா யண்ணலே வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர் பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே |
3.051.6 |
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! அபயம் என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த அடியேனையும் அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக. வஞ்சகம் செய்யும் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு, பஞ்சவன், தென்னன் முதலிய பெயர்களையுடைய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
3345 | செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய் அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக் கங்கு லாரமண் கைய ரிடுங்கனல் பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே |
3.051.7 |
சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய கண்களையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக! இருள்மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது, உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
3346 | தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய் ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே |
3.051.8 |
பிறன் மாதரை விரும்பிய தூர்த்தனாகிய இராவணனின் வீரத்தை அழித்துப்பின் அருள்செய்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருங்கருணையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக! இறைவனைத் துதிக்கும் பேறு பெறாத சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பு, இப்பூவுலகை ஆளும் தென்னன் பாண்டியனைச் சென்று பற்றுவதாக!
3347 | தாவி னானயன் றானறி யாவகை மேவி னாய்திரு வாலவா யாயருள் தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பாவி னான்தென்னன் பாண்டியற்காகவே |
3.051.9 |
உலகத்தைத் தாவியளந்த திருமாலும், பிரமனும் அறிய முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய் இறைவனே! அடியேனுக்கு அருள் புரிவீராக! நீராடமையால் தூய்மையற்ற சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக் காரணமான பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக!
3348 | எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக் குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர் பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே |
3.051.10 |
எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும், அண்டங்களுக்கெல்லாம் நாயகனான சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று அருள்புரிவீராக! சிறுமையுடைய சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
3349 | அப்ப னாலவா யாதி யருளினால் வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக் கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும் செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே |
3.051.11 |
எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய் ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக என்று உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத் திகழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.051.திருஆலவாய் , பாண்டிய, பற்றுவதாக, அஞ்சேல், வுஞ்சுடர், ணர்கொளு, திருஆலவாயில், சென்று, சமணர்கள், லென்றருள், இம்மடத்திற்கு, வீற்றிருந்தருளும், வைத்த, னேயஞ்ச, காகவே, மன்னனைச், பாண்டியற், என்னை, திருஆலவாய், ராமம, நெருப்பு, பாண்டியற்காகவே, தென்னன், செய்யெனை, அருள்புரிவீராக, இட்ட, மன்னனைப், வாலவாய், மேவிய, அருள்செய்வீராக, லாவம, நெருப்பானது, சிவபெருமானே, அடியேனை, திருமுறை, னேதிரு, அருள், இந்நெருப்பு, செய்வீராக, செய்யெனைக், கண்களையுடைய, பதிகங்கள், விளங்கும், சமணர், உடையவரே, வன்தென்னன், தலைவரே, பற்ற, திருச்சிற்றம்பலம், தக்கன், தேவாரப், அண்ணலே, மூன்றாம்