மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.050.திருத்தண்டலைநீணெறி
3.050.திருத்தண்டலைநீணெறி
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீணெறிநாதேசுவரர்.
தேவியார் - ஞானாம்பிகையம்மை.
3331 | விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம் கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம் நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே |
3.050.1 |
விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள சடை முடியையுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது கரும்பும், செந்நெலும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
3332 | இகழுங்
கால னிதயத்து மென்னுளும் திகழுஞ் சேவடி யான்றிருந் தும்மிடம் புகழும் பூமக ளும்புணர் பூசுரர் நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே |
3.050.2 |
சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம், புகழுடைய திரு மகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
3333 | பரந்த நீலப் படரெரி வல்விடம் கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம் சுரந்த மேதி துறைபடிந் தோடையில் நிரந்த தண்டலை நீணெறி காண்மினே |
3.050.3 |
விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.
3334 | தவந்த வென்புந் தவளப் பொடியுமே உவந்த மேனியி னானுறை யும்மிடம் சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும் நிவந்த தண்டலை நீணெறி காண்மினே |
3.050.4 |
வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
3335 | இலங்கை வேந்த னிருபது தோளிற விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடம் சலங்கொ ளிப்பி தரளமுஞ் சங்கமும் நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே |
3.050.8 |
இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு கயிலைமலையின்கீழ் அடர்த்த இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும், முத்துக்களும், சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்துவரப்பட்டுச் செல்வவளம் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
3336 | கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென் றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம் செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலை நீணெறி காண்மினே |
3.050.9 |
சிருட்டி செய்யும் பிரமன் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றினான். அவனும், திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
3337 | கலவு சீவரத் தார்கையி லுண்பவர் குலவ மாட்டாக் குழக னுறைவிடம் சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும் நிலவு தண்டலை நீணெறி காண்மினே |
3.050.10 |
சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய புத்தர்களும், கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும் சமணர்களும் அன்பு செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வளைந்தமாமதில் களும், சுண்ணச் சாந்தினாலாகிய மாடங்களும் விளங்குகின்ற திருத் தண்டலை நீள்நெறி ஆகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
3338 | நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத் தோற்று மேன்மையர் தோணி புரத்திறை சாற்று ஞானசம் பந்தன் றமிழ்வலார் மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே |
3.050.11 |
திருநீறு அணியப்பெற்ற அடியவர்கள் வாழும் திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய திருநீற்றின் மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.050.திருத்தண்டலைநீணெறி , வீற்றிருந்தருளும், தண்டலை, நீணெறி, திருத்தண்டலை, காண்மினே, இடமாவது, நீள்நெறியாகும், தரிசித்து, வழிபடுங்கள், சிவபெருமான், அங்கு, இறைவனை, போற்றுங்கள், திருமுறை, வணங்கிப், விளங்கும், பெருமானைத், திருத்தண்டலைநீணெறி, இறைவன், இலங்கை, பரந்த, மிகுந்த, முத்துக்களும், இத்திருத்தலத்தைத், தேவாரப், மூன்றாம், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், தும்மிடம், செய்யும், சிவந்த