மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.034.திருமுதுகுன்றம்
3.034.திருமுதுகுன்றம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
3159 | வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட அண்ணலா ராயிழை யாளொடு மமர்விடம் விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர் திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே |
3.034.1 |
பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது, வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லைநிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
3160 | வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு பொறியுலா மரவசைத் தாடியோர் புண்ணியன் மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடம் செறியுளார் புறவணி திருமுது குன்றமே |
3.034.2 |
வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து, படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான், இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய், உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
3161 | ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல் நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம் தேறலார் பொழிலணி திருமுது குன்றமே |
3.034.3 |
இறைவன், இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு, கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து, திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
3162 | உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும் விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம் உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த் திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே |
3.034.4 |
இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன். உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும், பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும்.
3163 | கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர் இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம் செடியதார் புறவணி திருமுது குன்றமே |
3.034.5 |
கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற, இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில், கூரிய முனையுடைய மழுப்படை ஏந்தி, உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
3164 | கானமார் கரியினீ ருரிவையார் பெரியதோர் வானமார் மதியினோ டரவர்தா மருவிடம் ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடும் தேனமார் பொழிலணி திருமுது குன்றமே |
3.034.6 |
காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திய இறைவன், அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும், பாம்பையும் அணிந்து, உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து, அருளும் பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
3165 | மஞ்சர்தா
மலர்கொடு வானவர் வணங்கிட வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே அஞ்சொலா ளுமையொடும் மமர்விட மணிகலைச் செஞ்சொலார் பயிறருந் திருமுது குன்றமே |
3.034.7 |
வலிமை மிகந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர்தூவிப் போற்றி வணங்க, கொடுந்தொழில் செய்யும் வேடர்களும், பிற ஆடவர்களும் விரும்பித் தொழ, அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும், பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும்.
3166 | காரினா
ரமர்தருங் கயிலைநன் மலையினை ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம் சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே |
3.034.8 |
மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர் கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை, அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது, அவனை நலியச் செய்த இறைவன், கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும்.
3167 | ஆடினார் கானகத் தருமறை யின்பொருள் பாடினார் பலபுகழ்ப் பரமனா ரிணையடி ஏடினார் மலர்மிசை யயனுமா லிருவரும் தேடினா ரறிவொணார் திருமுது குன்றமே |
3.034.9 |
இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர். அரிய வேதங்களை அருளி, அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர். எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேடியும் அறியப்படவொண்ணாதவர். அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும்.
3168 | மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர் பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின் வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத் தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே |
3.034.10 |
அழுக்கு உடம்பையும், அழுக்கு உடையையுமுடைய சமணர்களும், புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல. வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க, அழகும், புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து, அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள்.
3169 | திண்ணினார் புறவணி திருமுது குன்றரை நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல் எண்ணினா னீரைந்து மாலையு மியலுமாப் பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே |
3.034.11 |
செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின் பாவம் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.034.திருமுதுகுன்றம் , திருமுதுகுன்றம், திருமுது, குன்றமே, வீற்றிருந்தருளும், ஆகும், அழகிய, உமாதேவியோடு, இறைவன், அணிந்து, இடமாவது, இடம், புறவணி, திருமுறை, கொண்டு, சிவபெருமான், உரையினா, சடைமுடியில், தோலை, குரலில், தேன், என்னும், மலையினை, வேதங்களை, இறைவர், திருமேனியில், வீற்றிருக்கும், அழுக்கு, போற்றி, மருவிடம், பொருந்திய, மலர்கொடு, வானவர், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், மூன்றாம், தேவாரப், விளங்கும், மங்கையோ, நிறைந்த, பொழிலணி, சோலைகள், கொன்றை, டமர்விடம், வாசனை, தேவர்கள்