மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.033.திருஉசாத்தானம்
3.033.திருஉசாத்தானம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மந்திரபுரீசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
3150 | நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான் போருடைச் சுக்கிரீ வன்அநு மான்றொழக் காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம் சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே |
3.033.1 |
பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
3151 | கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ் தில்லையா னுறைவிடந் திருவுசாத் தானமே |
3.033.2 |
முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை) இறைவன் வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன். குறிதரு கோலநற் குணத்தினா ரடிதொழ முன்பல்லிருந்த உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன். முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தில், தேன் துளிக்கும் சோலைகளையுடைய அழகிய பழம்பதியான தில்லையில் விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
3152 | தாமலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தங்கனா வாக்கினா னொருநொடிக் காமனா ருடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல் சேமமா வுறைவிடந் திருவுசாத் தானமே |
3.033.3 |
தான் அயலார் போலத் தன் மாமனான தக்கன் செய்த வேள்வியை ஊமன் கண்ட கனவு போலப் பயனற்ற தாக்கினான். ஒரு நொடியில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு செய்த நெற்றிக் கண்ணுடைய கடவுளாவான். அப்பெருமான் அடியவர்கட்கு நன்மை தரும் பொருட்டு வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
3153 | மறிதரு
கரத்தினான் மால்விடை யேறியான் குறிதரு கோலநற் குணத்தினா ரடிதொழ நெறிதரு வேதியர் நித்தலு நியமஞ்செய் செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே |
3.033.4 |
இள மான்கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி, பெருமையுடைய இடப வாகனத்திலேறி, சிவவேடப் பொலிவுடைய நற்பண்புடைய அடியவர்கள் தன் திருவடியைத் தொழுது போற்றவும், சிவாகமநெறியில் ஒழுகும் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசை செய்யவும் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருவுசாத்தானம் ஆகும்.
3154 | பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள் தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக் கொண்டிரைக் கொடியொடுங் குருகினி னல்லினம் தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே |
3.033.7 |
பண்டைக்காலம் முதல் மகிழ்ச்சியால் ஆரவாரித்துப் பிரமனும், திருமாலும், மற்றுமுள்ள பல பக்தர்களும் அடிமைத் திறத்தினால் மலர்களைத் தூவித் தோத்திரம் சொல்லி வழி பட, இறைவன் வீற்றிருந்தருளுவது, மீன் முதலிய இரைகளைக் கவரும் காக்கையோடு, நல்ல பறவை இனங்கள் தங்குகின்ற, நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருவுசாத்தானம் ஆகும்.
3155 | மடவரல் பங்கினன் மலைதனை மதியாது சடசட வெடுத்தவன் தலைபத்து நெரிதர அடர்தர வூன்றியங் கேயவற் கருள்செய்தான் திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே |
3.033.8 |
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் இறைவன், கயிலைமலையை மதியாது பெயர்த்தெடுத்த இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றி அம்மலையின்கீழ் அவனை அடர்த்து, பின்னர் இராவணன் தன் தவறுணர்ந்து வழிபட அவனுக்கு அருள் செய்தவன். அப்பெருமான் உறுதியாக வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
3156 | ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும் காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான் பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம் சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே |
3.033.9 |
இறைவர் ஆணுமல்லர். பெண்ணுமல்லர். பிரமனும், திருமாலும் காணொணாத வண்ணம் விளங்குபவர். தம்மை நினைந்து வழிபடும் அன்பர்களின் மனத்தில் நிறைந்துள்ளவர். தம்மை வழிபடும் அடியவர்களின் உடல்நோயை நீக்குவதோடு பிறவி நோயையும் தீர்ப்பவர். அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் ஆகாயமளாவிய மாளிகைகள் உடைய திருவுசாத்தானம் ஆகும்.
3157 | கானமார் வாழ்க்கையான் காரமண் டேரர்சொல் ஊனமாக் கொண்டுநீ ருரைமினுய் யவெனில் வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில் தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே |
3.033.10 |
சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை உணராது கூறும் சொற்கள் பயனற்றவை. நீங்கள் உய்ய வேண்டும் என்றால் சுடுகாட்டில் திருநடனம் செய்யும் இறைவன் வீற்றிருந்தருளுகின்ற, வானளாவிய உயர்ந்த மதில்களும், மாளிகைகளும், செழித்த சோலைகளும் சூழ்ந்த இனிய நிலவு தோயும் திருவுசாத்தானம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
3158 | வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன் திரைதிரிந் தெறிகடற் றிருவுசாத் தானரை உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ் வல்லார் நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே |
3.033.11 |
மலையிலிருந்து தன் தன்மை மாறுபட்டுப் பாயும் காவிரியின் நீர் வளமும், வயல் வளமும் மிகுந்த புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன், அலைவீசுகின்ற கடலையுடைய திருவுசாத்தானத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை உணர்ந்து போற்றிய இந்த ஒண் தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நரை, திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழ்ந்து சிவஞான நெறியில் நிற்பர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.033.திருஉசாத்தானம் , தானமே, திருவுசாத், திருவுசாத்தானம், ஆகும், வீற்றிருந்தருளும், இடம், இறைவன், திருஉசாத்தானம், திருமுறை, சூழ்ந்த, செய்த, அப்பெருமான், விளங்கும், வேள்வியை, வுறைவிடந், திருமாலும், வழிபடும், வளமும், தம்மை, மதியாது, அழகிய, பிரமனும், கோலநற், பதிகங்கள், தேவாரப், சிவபெருமான், தொழுது, திருச்சிற்றம்பலம், மூன்றாம், கோவண, குணத்தினா, காத்தருள், குறிதரு, உடையவன், ரடிதொழ