முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.035.திருவீழிமிழலை
1.035.திருவீழிமிழலை
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
371 |
அரையார் விரிகோ வணவாடை நரையார் விடையூர் திநயந்தான் விரையார் பொழில்வீ ழிம்மிழலை உரையா லுணர்வா ருயர்வாரே. |
1.035.1 |
இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும், வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்.
372 |
புனைதல் புரிபுன் சடைதன்மேல் கனைதல் லொருகங் கைகரந்தான் வினையில் லவர்வீ ழிம்மிழலை நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே. |
1.035.2 |
மலரால் அலங்கரிக்கப்பட்ட முறுக்குக்களை உடைய சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?
373 |
அழவல் லவரா டியும்பாடி எழவல் லவரெந் தையடிமேல் விழவல் லவர்வீ ழிம்மிழலை தோழவல் லவர்நல் லவர்தொண்டே. |
1.035.3 |
அழவல்லவரும், ஆடியும் பாடியும் எழவல்லவரும் எந்தையாகிய இறைவன் திருவடிமேல் விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழ வல்லவரே நல்லவர். அவர் தொண்டே நற்றொண்டாம்.
374 |
உரவம் புரிபுன் சடைதன்மேல் அரவம் மரையார்த் தவழகன் விரவும் பொழில்வீ ழிம்மிழலை பரவும் மடியா ரடியாரே. |
1.035.4 |
வலிமையை வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும், பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள அழகனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், பொழில்கள் விரவிச்சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.
375 |
கரிதா கியநஞ் சணிகண்டன் வரிதா கியவண் டறைகொன்றை விரிதார் பொழில்வீ ழிம்மிழலை உரிதா நினைவா ருயர்வாரே. |
1.035.5 |
கரியதாகிய நஞ்சினை உண்டு அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும், வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள் விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப்பெற்றதும் ஆகிய திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.
376 |
சடையார் பிறையான் சரிபூதப் படையான் கொடிமே லதொர்பைங்கண் விடையா னுறைவீ ழிம்மிழலை அடைவா ரடியா ரவர்தாமே. |
1.035.6 |
சடைமிசைச்சூடிய பிறைமதியை உடையவனும், இயங்கும் பூதப் படைகளை உடையவனும், கொடிமேல் பசிய கண்களை உடைய ஒற்றை விடையேற்றை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம், ஏ அசைநிலை.
377 |
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க நெறியார் குழலா ளொடுநின்றான் வெறியார் பொழில்வீ ழிம்மிழலை அறிவா ரவலம் மறியாரே. |
1.035.7 |
கால்களிற் செறிந்த கழல், சிலம்பு ஆகிய அணிகள் ஆர்க்கச் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருளியதும் மணம் கமழும் பொழிலகளால் சூழப்பெற்றதுமான திருவீழிழலையைத் தியானிப்பவர் அவலம் அறியார்.
378 |
உளையா வலியொல் கவரக்கன் வளையா விரலூன் றியமைந்தன் விளையார் வயல்வீ ழிம்மிழலை அளையா வருவா ரடியாரே. |
1.035.8 |
மிக வருந்திக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான் எழுந்தருளியதும், விளைவு மிகுந்த வயல்களை உடையதுமான திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.
379 |
மருள்செய் திருவர் மயலாக அருள்செய் தவனா ரழலாகி வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. |
1.035.9 |
திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க, அரிய அழலுருவாய் வெளிப்பட்டு நின்று வெருட்டியவனும் பின் அவர்க்கு அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தௌந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்.
380 |
துளங்குந் நெறியா ரவர்தொன்மை வளங்கொள் ளன்மின்புல் லமண்டேரை விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை உளங்கொள் பவர்தம் வினையோய்வே. |
1.035.10 |
தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத்தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும்.
381 |
நளிர்கா ழியுண்ஞா னசம்பந்தன் குளிரார் சடையா னடிகூற மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. |
1.035.11 |
குளிர்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலைப் பெருமான் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.035.திருவீழிமிழலை , ழிம்மிழலை, சிவபிரான், பொழில்வீ, உடைய, எழுந்தருளியதும், திருவீழிமிழலையை, சிறந்த, பொழில்கள், திருவீழிமிழலை, திருமுறை, ஆகிய, அடியவராவர், ரடியாரே, திருவீழிமிழலையைத், வலிமை, உடையவனும், சூழ்ந்த, விளங்கும், சடைமுடி, பொருந்திய, தேவாரப், விரிந்த, ருயர்வாரே, பதிகங்கள், மணம், புரிபுன், திருச்சிற்றம்பலம், சிவந்த, லவர்வீ, சடைதன்மேல், உறையும்