முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.034.சீகாழி
1.034.சீகாழி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
360 |
அடலே றமருங் கொடியண்ணல் மடலார் குழலா ளொடுமன்னுங் கடலார் புடைசூழ் தருகாழி தொடர்வா ரவர்தூ நெறியாரே. |
1.034.1 |
வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்ட கொடியைத்தனதாகக் கொண்ட தலைவனாகிய சிவபிரான், மலர் சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், கடலால் புடை சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை இடைவிடாது சென்று வழிபடுபவர் தூய நெறியில் நிற்பவராவர்.
361 |
திரையார் புனல்சூ டியசெல்வன் வரையார் மகளோ டுமகிழ்ந்தான் கரையார் புனல்சூழ் தருகாழி நிரையார் மலர்தூ வுமினின்றே. |
1.034.2 |
அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்.
362 |
இடியார் குரலே றுடையெந்தை துடியா ரிடையா ளொடுதுன்னுங் கடியார் பொழில்சூழ் தருகாழி அடியா ரறியா ரவலம்மே. |
1.034.3 |
இடியை ஒத்த குரலையுடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய இறைவன், துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வணங்கும் அடியவர்கள், துன்பத்தை அறியார்கள்.
363 |
ஒளியார் விடமுண் டவொருவன் அளியார் குழன்மங் கையொடன்பாய்க் களியார் பொழில்சூழ் தருகாழி எளிதா மதுகண் டவரின்பே. |
1.034.4 |
நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான், வண்டுகள் மணத்தைத் தேடி வந்து நாடும் கூந்தலை உடைய உமையம்மையோடு, அன்புடன் களிக்கும், பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியைக் கண்டவர்க்கு இன்பம் எளிதாம்.
364 |
பனியார் மலரார் தருபாதன் முனிதா னுமையோ டுமுயங்கிக் கனியார் பொழில்சூழ் தருகாழி இனிதா மதுகண் டவரீடே |
1.034.5 |
தண்மை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான் உமையம்மையோடு கூடி உலகஉயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளினும், தான் முனிவனாக விளங்குவோன். அத்தகையோன் எழுந்தருளியதும் கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தமையும்.
365 |
கொலையார் தருங்கூற் றமுதைத்து மலையான் மகளோ டுமகிழ்ந்தான் கலையார் தொழுதேத் தியகாழி தலையாற் றொழுவார் தலையாரே. |
1.034.6 |
கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும், மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப் பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.
366 |
திருவார் சிலையா லெயிலெய்து உருவா ருமையோ டுடனானான் கருவார் பொழில்சூழ் தருகாழி மருவா தவர்வான் மருவாரே. |
1.034.7 |
அழகிய வில்லால் மூவெயில்களை எய்தழித்து எழில் தவழும் உமையம்மையோடு உடனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும், கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப் பெற்றதுமான சீகாழிப் பதியை அடையாதவர் விண்ணுலக இன்பங்களை அடையாதவராவர்.
367 |
அரக்கன் வலியொல் கவடர்த்து வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான் சுரக்கும் புனல்சூழ் தருகாழி நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. |
1.034.8 |
இராவணனது வலிமை சுருங்குமாறு அவனைத் தளர்ச்சியெய்த அடர்த்து மலைமகளோடு மகிழ்ந்த சிவபிரான் விளங்குவதும் மேலும் மேலும் பெருகிவரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியை நினைந்து வரிசையான மலர்களைத் தூவுமின்.
368 |
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் உருவிற் பெரியா ளொடுசேருங் கருநற் பரவை கமழ்காழி மருவப் பிரியும் வினைமாய்ந்தே. |
1.034.9 |
திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரிஉருவாகி நிமிர்ந்த சிவபிரான் அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும் கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.
369 |
சமண்சாக் கியர்தா மலர்தூற்ற அமைந்தா னுமையோ டுடனன்பாய்க் கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. |
1.034.10 |
சமணர்களும் சாக்கியர்களும் புறங்கூற, உமையம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம் மனத்தே தியானித்து, மலர் தூவித் தொழுதலே சிறந்த தொண்டாகும்.
370 |
நலமா கியஞா னசம்பந்தன் கலமார் கடல்சூழ் தருகாழி நிலையா கநினைந் தவர்பாடல் வலரா னவர்வா னடைவாரே. |
1.034.11 |
நன்மையை மக்கட்கு
நல்குவதும் மரக்கலங்களை உடைய கடலால் சூழப்
பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக
நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின்
பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும்
விண்ணக இன்பங்களை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.034.சீகாழி , சீகாழிப், தருகாழி, பதியை, உமையம்மையோடு, எழுந்தருளியிருப்பதும், சிவபிரான், உடைய, பொழில்சூழ், பொருந்திய, மகளோ, திருமுறை, டுமகிழ்ந்தான், மணம், பொழில்கள், மலர்தூ, சிவபெருமான், சூழப்பட்டதுமான, மலர், சீகாழி, சூழ்ந்ததுமான, மதுகண், சூழப், பெற்றதுமான, பதியைத், மேலும், பிரியும், இன்பங்களை, னுமையோ, சென்று, வலிமை, கொண்ட, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், சூடிய, கூந்தலை, மலைமகளோடு, மகிழ்ந்து, கூடிய, புனல்சூழ், கடலால், வரிசையான