முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.114.திருமாற்பேறு
1.114.திருமாற்பேறு
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
1228 |
குருந்தவன் குருகவன் கூர்மையவன் பெருந்தகை பெண்ணவ னாணுமவன் கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும் மருந்தவன் வளநகர் மாற்பேறே. |
1.114.1 |
குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும்; அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.
1229 |
பாறணி வெண்டலை கையிலேந்தி வேறணி பலிகொளும் வேட்கையனாய் நீறணிந் துமையொரு பாகம் வைத்த மாறிலி வளநகர் மாற்பேறே. |
1.114.2 |
பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர், மாற்பேறு.
1230 |
கருவுடை யாருல கங்கள்வேவச் செருவிடை யேறியுஞ் சென்றுநின்று உருவிடை யாளுமை யாளுந்தானும் மருவிய வளநகர் மாற்பேறே. |
1.114.3 |
பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப் பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில் வல்ல விடைமீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.
1231 |
தலையவன் றலையணி மாலைபூண்டு கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான் கலைநவின் றான்கயி லாயமென்னும் மலையவன் வளநகர் மாற்பேறே. |
1.114.4 |
எல்லோரினும் மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.
1232 |
துறையவன் றொழிலவன் றொல்லுயிர்க்கும் பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன் கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற மறையவன் வளநகர் மாற்பேறே. |
1.114.5 |
பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
1233 |
பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக் கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன் விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. |
1.114.6 |
பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
1234 |
தீதிலா மலையெடுத் தவ்வரக்கன் நீதியால் வேதகீ தங்கள்பாட ஆதியா னாகிய வண்ணலெங்கள் மாதிதன் வளநகர் மாற்பேறே. |
1.114.8 |
குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
1235 |
செய்யதண் டாமரைக் கண்ணனொடும் கொய்யணி நறுமலர் மேலயனும் ஐயனன் சேவடி யதனையுள்க மையல்செய் வளநகர் மாற்பேறே. |
1.114.9 |
சிவந்த தண் தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.
1236 |
குளித்துணா வமணர்குண் டாக்கரென்றும் களித்துநன் கழலடி காணலுறார் முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி வளைத்தவன் வளநகர் மாற்பேறே. |
1.114.10 |
குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப் பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
1237 |
அந்தமின் ஞானசம் பந்தன்சொன்ன செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச் சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார் எந்தைதன் கழலடி யெய்துவரே. |
1.114.11 |
ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.114.திருமாற்பேறு , வளநகர், மாற்பேறே, மாற்பேறாகும், சிவபிரானது, உடைய, விளங்குபவனும், திருமுறை, திருமாற்பேறு, சிவபிரான், அழகிய, ஆகிய, விளங்கும், தாமரை, கழலடி, வழிபட, சிவபிரானின், உமையம்மையை, மாற்பேறு, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், மலர், கண்களை, வெள்ளிய, வேட்கையனாய், சென்று