முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.113.திருவல்லம்
1.113.திருவல்லம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வல்லநாதர்.
தேவியார் - வல்லாம்பிகையம்மை.
1218 |
எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத் தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறுவேறு தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.1 |
அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தௌயச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.
1219 |
தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத் தூயவன் றூமதி சூடியெல்லாம் ஆயவ னமரர்க்கு முனிவர்கட்கும் சேயவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.2 |
உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக ஆனவனும், போகிகள் ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
1220 |
பார்த்தவன் காமனைப் பண்பழியப் போர்த்தவன் போதகத் தின்னுரிவை ஆர்த்தவன் நான்முகன் றலையையன்று சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.3 |
மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண்கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
1221 |
கொய்தவம் மலரடி கூடுவார்தம் மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் பெய்தவன் பெருமழை யுலகமுய்யச் செய்தவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.4 |
அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
1222 |
சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் நேர்ந்தவ னேரிழை யோடுங்கூடித் தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே சேர்ந்தவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.5 |
தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.
1223 |
பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று சிதைத்தவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.6 |
சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும், விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
1224 |
இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங் ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம் நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே திகழ்ந்தவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.8 |
இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும், அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.
1225 |
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய அரியவ னருமறை யங்கமானான் கரியவ னான்முகன் காணவொண்ணாத் தெரியவன் வளநகர் திருவல்லமே. |
1.113.9 |
எல்லோரினும் பெரியவனும், அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும், அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.
1226 |
அன்றிய வமணர்கள் சாக்கியர்கள் குன்றிய வறவுரை கூறாவண்ணம் வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்கும் சென்றவ னுறைவிடந் திருவல்லமே. |
1.113.10 |
கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.
1227 |
கற்றவர் திருவல்லங் கண்டுசென்று நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன குற்றமில் செந்தமிழ் கூறவல்லார் பற்றுவ ரீசன்பொற் பாதங்களே. |
1.113.11 |
கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.113.திருவல்லம் , திருவல்லமாகும், திருவல்லமே, னுறைவிடந், ஆகிய, சிவபிரானது, உறைவிடம், திருமுறை, செய்தவனும், சிவபிரான், அருள், திருவல்லம், அழகிய, குன்றிய, வளநகர், அரிய, பெருமழை, விதிர்த்தெழு, தன்னைச், இடம், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், கங்கையைத், செய்து, ஆனவனும், அவற்றின், கொய்து