யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 2
2 ஆதலால், அவன் மூப்பர் அனைவரையும் படைத் தலைவர்களையும் படை வீரர்களையும் வரவழைத்துத் தன் இரகசிய எண்ணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினான்.
3 மண்ணகம் முழுவதையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்வதே தன் எண்ணம் எனக் கூறினான்.
4 அதைக் கேட்ட அவர்கள் யாவரும் மகிழ்வுற்றனர், எனவே, அரசன் நபுக்கோதனசார் படைத் தலைவன் ஒலொபெர்னெசை, தன்னிடம் அழைத்தான்.
5 அவனை நோக்கி," நீ மேற்கு நாட்டினர் அனைவர் மீதும், குறிப்பாக நமது கட்டளையைப் புறக்கணித்த மக்கள் மீதும் படையெடுத்துச் செல்.
6 எந்த நாட்டுக்கும் இரக்கம் காட்டாதே. அரணுள்ள நகர்கள் அனைவற்றையும் என் கீழ்க் கொணர்வாய் என்று கட்டளையிட்டான்.
7 ஒலொபெர்னெஸ் உடனே அசீரியத் தலைவர்களையும் ஏனைய படைத்தளபதிகளையும் அலுவலர்களையும் வரவழைத்து அரசன் கட்டளையிட்ட படி போருக்குச் செல்ல வேண்டிய வீரர்களைக் கணக்கிட்டான். அவர்கள் நூற்றிருபதினாயிரம் காலாட்படையினரும் வில் எய்யும் பன்னிரண்டாயிரம் குதிரைப்படையினரும் ஆவர்.
8 மேலும், அவன் தன் படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஏராளமாய்ச் சுமந்து சென்ற எண்ணற்ற ஒட்டகங்களையும், கணக்கிலடங்கா ஆடு மாடுகளையும் அவர்களுக்கு முன் அனுப்பி வைத்தான்.
9 அத்தோடு வழியுணவுக்குத் தேவையாயிருந்த தானியத்தைச் சீரியா முழுவதுமிருந்து சேகரித்து வைக்கக் கட்டளையிட்டான்.
10 அதுவுமின்றி, அரண்மனையிலிருந்து ஏராளமான பொன்னும் வெள்ளியும் எடுத்துக் கொண்டான்.
11 இவ்வாறு அவனும் அவனுடைய தேர்ப்படையினர், குதிரைப்படையினர், வில்படையினர் ஆக எல்லாப் படைவீரர்களும் வெட்டுக்கிளிகளைப் போல் பூமியை நிரப்பிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள்.
12 ஒலொபெர்னெஸ் அசீரியரின் எல்லைகளைக் கடந்ததும், சிலிசியாவின் இடப்பக்கத்திலிருந்த ~ஆங்கே~ என்றே பெரிய மலைகட்குச் சென்று அவற்றின் எல்லாக் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினான்.
13 மேலும் பேரும் புகழும் வாய்ந்த ~மேலோத்தி~ என்ற நகரைத் தாக்கி அதையும் கைப்பற்றினான், தார்சீஸ் நகரின் குடிகளையும், பாலைவனப் பகுதியிலும் ~கெல்லோன்~ என்ற நாட்டிற்குத் தெற்கேயும் குடியிருந்த இஸ்மாயேல் குலத்தாரையும் கொள்ளையடித்துச் சென்றான்.
14 பின் யூப்ரடீஸ் நதியைத் தாண்டி மெசொப்பொத்தேமியா நாட்டில் புகுந்து, மாம்பிரே ஆறு தொடங்கிக் கடல் வரை இருந்த சிறந்த நகர்கள் அனைத்தையும் அழித்தான்.
15 சிலிசியா தொடங்கித் தெற்கே யாப்பேத்தின் எல்லை வரையிலுமிருந்த நாடு முழுவதையும் கைப்பற்றினான். அன்றியும், மேதியர் அனைவரையும் சிறைப்படுத்தி,
16 அவர்கள் செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்தான். தன்னை எதிர்த்து நின்ற அனைவரையும் வாளுக்கு இரையாக்கினான்.
17 அறுவடைக்காலத்தில் அவன் தமாஸ்கு நகர வயல்வெளிகளில் இறங்கி விளைச்சலை எல்லாம் தீக்கிரையாக்கினான். எல்லா மரங்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தான்.
18 எனவே, அந்நாட்டுக் குடிகள் அனைவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, அனைவரையும், யூதித், அவன், அரசன், ஆகமம், கைப்பற்றினான், நகர்கள், கட்டளையிட்டான், ஒலொபெர்னெஸ், அழித்தான், மேலும், மீதும், படைத், ஆன்மிகம், திருவிவிலியம், நபுக்கோதனசார், தலைவர்களையும், அவர்களுக்கு, முழுவதையும்