மத்தேயு நற்செய்திகள் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 11
இயேசுவும் யோவான் ஸ்நானகனும்
1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் கட்டளை கொடுத்து முடிந்ததும், பக்கத்து ஊர்களில் போதிக்கவும் தூது உரைக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.
2 அருளப்பரோ கிறிஸ்துவின் செயல்களைச் சிறையில் கேள்வியுற்று,
3 "வரப்போகிறவர் நீர்தாமோ? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று தம் சீடர்வழியாகக் கேட்டு அனுப்பினார்.
4 இயேசு மறுமொழியாக: "நீங்கள் கண்டதையும் கேட்டதையும் அருளப்பரிடம் போய் அறிவியுங்கள்.
5 குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவர்க்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6 என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்.
7 அவர்கள் போகும்போது இயேசு அருளப்பரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்குச் சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?
8 பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த மனிதனையோ? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசர் மாளிகையில் இருக்கின்றனர்.
9 பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 இவரைப்பற்றித்தான்: ~இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்~ என்று எழுதியுள்ளது.
11 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: "பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.
12 ஸ்நாபக அருளப்பர் நாள்முதல் இதுவரை, விண்ணரசு பலவந்தத்திற்கு உள்ளாகிவருகிறது@ பலவந்தம் செய்வோர் அதைக் கைப்பற்றுகின்றனர்.
13 ஏனெனில், திருச்சட்டமும் இறைவாக்கினர் அனைவரும் அருளப்பர்வரை இறைவாக்கு உரைத்தனர்.
14 நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், வர இருக்கும் எலியாஸ் இவரே.
15 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
16 "இத்தலைமுறையை யாருக்கு ஒப்பிடுவேன்? பொது இடத்தில் உட்கார்ந்து தம் தோழரைக் கூவியழைத்து:
17 ~நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை@ நாங்கள் புலம்பினோம் நீங்கள் மாரடிக்கவில்லை~ என்று கூறும் சிறுவரைப்போன்றது.
18 ஏனெனில், அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பேய்பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள்.
19 மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்@ அவரை ~ இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்~, என்கிறார்கள். ஆனால், தேவஞானம் சரியென்று அதன் செயலால் விளங்கிற்று."
நம்பிக்கையற்றோருக்கு எச்சரிப்பு
20 அவர் புதுமை பல செய்த நகரங்கள் மனந்திரும்பாமையால் அவற்றைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
21 "கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.
22 எனினும், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23 கப்பர் நகூமே, வானளாவ உயர்வாயோ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய். ஏனெனில், உன்னிடம் செய்த புதுமைகள் சோதோமில் செய்யப்பட்டிருப்பின், இந்நாள்வரை அது நிலைத்திருக்குமே.
24 எனினும், தீர்வைநாளில் சோதோம் நாட்டுக்கு நேரிடுவது உனக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
இயேசு தரும் இளைப்பாறுதல்
25 அவ்வேளையில் இயேசு கூறியதாவது: "தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன்.
26 ஆம், தந்தாய், இதுவே உமது திருவுளம்.
27 என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று, தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்.
28 "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்.
29 உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.
30 ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."
தேடல் தொடர்பான தகவல்கள்:
மத்தேயு நற்செய்திகள் - புதிய ஏற்பாடு, ", இயேசு, ஏற்பாடு, ஏனெனில், நீங்கள், சொல்லுகிறேன், உங்களுக்குச், மத்தேயு, செய்த, உனக்கு, நற்செய்திகள், நான், பார்க்கப், போனீர்கள், அவ்வளவு, அறியான், நேரிடுவதைப்போல், தீர்வைநாளில், நேரிடுவது, வேறெவனும், கடினமாய், என்னிடம், எனினும், மகன், தந்தை, இராது, சுமை, யாரென்று, உட்கார்ந்து, மெல்லிய, அவர், பின், எதைப், திருவிவிலியம், ஆன்மிகம், உமது, ஸ்நாபக, புதுமைகள், தீர், கேடு, நகரே, அருளப்பர், செய்யப்பட்டிருப்பின்