வேல் விருத்தம் - 1 - வேல் விருத்தம்
கம்சத்வனி - கண்ட சாபு
மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு செனெல்களொடு தரளம் இடவே ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி திடர் அடைய ஞுகரும் வடிவேல் தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள் எயிறுன் தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ் தரு துணைவன் அமரர் குயிலும் குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர் குயமொடமர் புரியு முருகன் குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள் குலையவிடு கொடிய வேலே (குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே) |
பெரிய சுறா மீன்கள் சேற்றில் புரளவும், ஆதிஷேசனின் கூட்டமான ஆயிரம் முடிகளின் மேல், சந்திர ஒளியும் சூரிய ஒளியும் சேர்ந்து தாக்கவும் பெரிதாக பரந்திருக்கும் மேகங்களின் உட் பாகம் சுழற்சி அடையவும், தேவர்களின் துன்பம் நீங்கவும், களிப்படைந்த, சிறகுகள் அறுக்கப் பட்ட, மலைகளின் சிகரங்களிலும், வீடுகளிலும், முச்சந்திகளிலும், மலை ஜாதிப் பெண்கள், செழுமையான நெல் தானியங்களுடன் முத்துக்களையும் உரலில் இட்டு குற்றவும், இந்த உலகில் முதன்மை ஸ்தானம் வகிக்கும் கங்கை முதலாகிய மற்ற நதிகள் பழைய படி தங்களுடைய ஓட்டத்தை ஆரம்பிக்கவும், சமுத்திரம் வற்றி மண் திடலாக போகும் படி, அந்த ஜலத்தை எல்லாம் உறிஞ்சிய, கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) வாசனைச் சாந்து, கஸ்தூரி (இவைகளின்) வாசனை கொண்டு நறு மணம் வீசும், ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் மதநீர் தோன்றும், கபோலமும், உறுதியான திண்மை பொருந்திய (பற்கள்) தந்தமும், தழைந்துள்ள இரண்டு காதுகளும், நெற்றிக் கண்ணும், கொண்டு விளங்கும் ஒப்பற்ற விநாயகப் பெருமான், மகிழ்கின்ற சகோதரனும், தேவர்களால் வளர்க்கப்பட்ட குயில் போன்ற இனிய குரலுடைய தேவசேனை, குகைகள் நிறைந்துள்ள மலையின் வசிக்கின்ற, வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய மயில் போன்ற வள்ளிப் பிராட்டி, என்கிற இரு நாயகிகளின், மார்பகங்களை அணைக்கும், முருகப் பெருமான், பால சுப்ரமணியன், சண்முகன்ஆகிய முருகப் பெருமானை, எதிர்த்து, பல வெற்றிச் சின்னங்களுடன் வந்த, அரக்கர்களின், சேனைகளை, சிதறிப் போகும் படி செய்த, வீரம் மிகுந்த வேலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 1 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வேலே, கொடிய, முருகப், பெருமான், போகும், ஒளியும், கொண்டு