பாடல் 986 - எழுகரைநாடு - திருப்புகழ்

ராகம் - மனோலயம்
தாளம் - ஆதி
தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன ...... தந்ததான |
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல் மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற விழைவுகு ராப்புனை ...... யுங்குமார முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட முழுதும லாப்பொருள் தந்திடாயோ பரகதி காட்டிய விரகசி லோச்சய பரமப ராக்ரம ...... சம்பராரி படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே. |
தந்திரம் ஏதும் இல்லாத நேரான பார்வையோடு உன்னை நோக்கிக் கருதியும், உன்னை நினைந்து மனம் உருகியும், உன்னைத் துதித்து வாழ்த்தியும், கண்களில் நீர் நிறைந்து வழிய, பக்தி மேலும் மேலும் பெருகவும், இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போக, விருப்பமுடன் குராமலரை அணியும் குமரனே, முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே, கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே, என்றெல்லாம் பாடி, மொழிகள் குழறும்படி உன்னைத் தொழுது, ஓயாமல் அழுது யான் உன்னால் ஆட்கொள்ளப்பட, உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞானப் பொருளை அடியேனுக்குத் தரமாட்டாயா? உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே, மலை அரசனே, மிக்க பராக்கிரமசாலியே, மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த பசுபதி சிவபிரான் போற்றிய பகவதியாகிய பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே, அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும், அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும், கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும், வெற்றி கொண்ட வேலனே, தேவர்களின் உலகில் யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய எழுகரைநாடு** என்ற தலத்தவர் தம்பிரானே.
* அருணகிரிநாதரின் வாழ்க்கையில் முருகன் உபதேசித்து பரகதியைக் காட்டியது குறிப்பிடப்படுகிறது.
** எழுகரைநாடு இலங்கையில் உள்ள திருத்தலம். சிலர் இத்தலம் குடகு நாட்டில் உள்ளதாகவும் சொல்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 986 - எழுகரைநாடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாத்தன, உன்னைத், அரசனே, உன்னை, மேலும், போற்றிய, வாழ்த்தியும், காட்டிய, பசுபதி, தம்பிரானே