பாடல் 95 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் -
பூர்விகல்யாணி; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தந்தந்தந் தந்தன தானன தந்தந்தந் தந்தன தானன தந்தந்தந் தந்தன தானன ...... தனதான |
வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட மெங்கெங்கும் பொங்கம காபுநி தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே. |
வஞ்சக எண்ணம் கொண்டவனும், வலிமை வாய்ந்தவனுமான ராவணன், பந்து போல வேகமாய்ச் செல்லும் வலிய குதிரை, தேர், யானை, மற்றும் மேக வரிசைக்கு நிகராக அடுக்கிய அனேகம் காலாட்படைகளுடன், போர்க்களத்துக்கு கூட்டி வந்து, அம்புக் கூட்டங்கள் நிறைந்து எதிர்த்தாலும், தனது சாமர்த்தியப் பெருமைப் பேச்சும், வீண் பேச்சும், இழிவான வார்த்தைகளும் பலவாகப் பேசியும், எதிரில் உள்ள சேனையோடு மிகவும் இடைவிடாது போரிட்ட போது, குரங்குச் சேனைகள் நிலையான நெருப்பைப் போல கோபம் கொண்டு, மலைகளையும், கரடுமுரடான மரங்களையும் பிடுங்கி வீசி, பேர்த்து எடுக்கப்பட்ட மலைப்பாறைகளினாலே நொறுக்கி, அசுரர்களின் உடம்பு, தலை, கரம், மார்பு இவைகளுடன் ஒளிவீசும் மற்ற உடற்பகுதிகளையும் சிதற அடித்து, அசுரர்களின் இனம் முழுவதையும், யமனுடைய தெற்குத் திசையை நாடிச்சென்று விழச்செய்து, அங்கு சென்றும் யம தூதர்கள் அசுரர்களைத் தள்ளு, தள்ளு, தள்ளு என்று கூறும்படியாக மாமிசம், கொழுப்பு மூளை இவற்றை சில பேய்கள் பார்த்தும், உண்டும், டிண்டிண்டென்றும் தாளமுடன் குதித்துக் கூத்தாடவும், சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற ராமனின் (திருமாலின்) மருகனே, அடைக்கலம், அடைக்கலம், சிறியேனுடைய அறிவு மிகக் கொஞ்சம், கொஞ்சம், துரையே, அருள் பாலித்து எப்போது எனக்கு இன்பம் தருகின்ற மோக்ஷ வீட்டைக் கொடுக்கப் போகிறாய்? சங்குகளும், தாமரையும், கயல் மீன்களும் உள்ள குளங்கள் பல இடங்களிலும் பொங்கி நிறைந்திருக்க, மிகுந்த பரிசுத்தம் துலங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 95 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தள்ளு, தானன, தந்தன, தந்தந்தந், கொஞ்சம், அசுரர்களின், அடைக்கலம், உள்ள, பெருமாளே, பேச்சும், கொண்டு