பாடல் 947 - திருப்புக்கொளியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தந்ததான |
மதப்பட்டவி சாலக போலமு முகப்பிற்சன வாடையு மோடையு மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி வயிற்றுக்கிடு சீகர பாணியு மிதற்செக்கர்வி லோசன வேகமு மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல விதப்பட்டவெ ளானையி லேறியு நிறைக்கற்பக நீழலி லாறியும் விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம் விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு பிரப்புத்வகு மாரசொ ரூபக வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே இதப்பட்டிட வேகம லாலய வொருத்திக்கிசை வானபொ னாயிர மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள இசைக்கொக்கவி ராசத பாவனை யுளப்பெற்றொடு பாடிட வேடையி லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற் றிதப்பட்டெதி ரேபொதி சோறினை யவிழ்த்திட்டவி நாசியி லேவரு திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன் செறிப்பித்த கராவதின் வாய்மக வழைப்பித்தபு ராணக்ரு பாகர திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே. |
மதநீர் பெருகுவதற்கு இடமானதும் அகலமானதுமான தாடையும், முன் புறத்தில் நுண்ணிய முகபடாமும் நெற்றிப் படமும், வாசனை பொருந்திய பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய யானையின் முதுகில் அம்பாரி பொருந்த, வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்தி, அழகு விளங்குமாறு வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும், நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத் தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும், மலைக் கோட்டை போன்றனவும், நிலா முற்றங்களை உடையனவுமாகிய அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளைஞனாகிய உருவம் உடையவனே, என் முன்னே வந்து தோன்றி என்னை ஆண்டருளிய, வயலூரில் வீற்றிருந்தருளும் செல்வனே, இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்று தரிசித்த அடியராகிய சுந்தரர் தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒரு மறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி, (தாம் கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசி என்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும், முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து (உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த** பழையவராகிய கருணாமூர்த்தியும், திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே.
* சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 947 - திருப்புக்கொளியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, சுந்தரர், வந்து, தனத்தத்தன, சென்ற, திருப்புக்கொளியூர், பாலகனை, கரையில், ஓராண்டு, முதலை, ஏரியில், இருந்த, கொண்ட, தம்பிரானே, உடைய, மேல், தோன்றி, கொண்டு, என்னும்