பாடல் 945 - அவிநாசி - திருப்புகழ்

ராகம் - முகாரி
தாளம் - ஆதி
தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன ...... தனதான |
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட கறுத்த குஞ்சியு மேநரை யாயிட மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி வருத்த முந்தர தாய்மனை யாள்மக வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட எனைக்க டந்திடு பாசமு மேகொடு சினத்து வந்தெதிர் சூலமு மேகையி லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான் இழுக்க வந்திடு தூதர்க ளானவர் பிடிக்கு முன்புன தாள்மல ராகிய இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும் கனத்த செந்தமி ழால்நினை யேதின நினைக்க வுந்தரு வாயுன தாரருள் கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக் கடற்ச லந்தனி லேயொளி சூரனை யுடற்ப குந்திரு கூறென வேயது கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா அனத்த னுங்கம லாலய மீதுறை திருக்க லந்திடு மாலடி நேடிய அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர் நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே. |
மனம் சுருங்கி வேதனைப்படும்படி எழுகின்ற கோழையும் அதிகரிக்கவும், கரு நிறமுள்ள தலை மயிர் நரை கொண்டு வெளுக்கவும், தாமரை போன்ற கண்கள் பஞ்சடைந்து பார்வை குறையவும், நடை தடுமாற்றம் அடையவும், துன்பத்தைத் தர, தாயார், மனைவி, மக்கள் ஆகியோர், வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும் பழிக்கும் படியான சொற்களைச் சொல்வதால், நிரம்ப நாள் தோறும் பரிகசித்துச் சிரிக்க, என்னை அடக்கி வெற்றிக் கொள்ளும் பாசக் கயிறு கொண்டு கோபத்துடன் வந்து எதிர்த்து, சூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசி, நெருப்பை வாய் கக்க, பயம் கொள்ளும்படி (என்னை) இழுக்க வந்திடும் யம தூதர்கள் என்னைப் பிடிப்பதற்கு முன்பாக, உன்னுடைய தாமரையாகிய இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு மயிலின் மீது வந்தருள வேண்டும். பொருள் செறிந்த செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக. என்னுடைய அருமையான உயிர்க்குத் துணையாக (என்) கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவாய். கடல் நீரில் (மாமரமாக) ஒளித்திருந்த சூரனுடைய உடலைப் பிளவு செய்ய அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து, ஒப்பற்ற சேவலும், மயிலும் ஆகும்படி செலுத்திய வேலை உடையவனே, அன்னத்தை வாகனமாக உள்ள பிரமனும் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் இலக்குமி சேர்ந்துள்ள திருமாலும் தேடிய சிவபெருமானுக்கு அரிய (பிரணவப்) பொருளை விளக்கி உபதேசித்த குமரேசனே, அற நெறியை ஓதுவோர்களும், பெருமை பொருந்திய அந்தணர்களும், உன்னை நாள் தோறும் தொழுபவர்களாய் அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள அருள் நிறையப் பாலித்து, அவிநாசி* எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 945 - அவிநாசி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தந்தன, தனத்த, உன்னுடைய, என்னை, வீற்றிருக்கும், தோறும், அருள், கொள்ளும், இழுக்க, பெருமாளே, கொண்டு, நாள்