பாடல் 933 - திருப்பாண்டிக்கொடுமுடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தாந்தத் தனதன தாந்தத் தனதன தாந்தத் தனதன ...... தனதான |
காந்தட் கரவளை சேந்துற் றிடமத காண்டத் தரிவைய ...... ருடனூசி காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி காண்டற் கநுபவ ...... விதமேவிச் சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில் சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி தாங்கித் தழுவுத ...... லொழியேனோ மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர் வாஞ்சைப் படியருள் ...... வயலூரா வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை மான்சிற் றடிதொழு ...... மதிகாமி பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும் பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு பாண்சொற் பரவிய ...... பெருமாளே. |
காந்தள் மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க, மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து, அவ்வாறே பெண் குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி, நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து, வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக, ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும் செயலை ஒழிக்க மாட்டேனோ? மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும் அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே, ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே, பாம்பை தனது சடா முடியில் தாங்கி விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி* என்னும் தலத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே.
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 933 - திருப்பாண்டிக்கொடுமுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்தத், தனதன, உள்ள, மேல், கொடுமுடி, பாண்டிக், பெருமாளே