பாடல் 92 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - மாயா மாளவ
கெளளை; தாளம் - ஆதி - 2 களை
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன தாத்தத் தத்தன ...... தனதான |
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி ...... யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர் காப்பைக் கட்டவர் ...... குருநாதா காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல காப்புக் குத்திர ...... மொழிவோனே வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர ...... முருகோனே வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே. |
கிழப் பருவத்தை அடைந்து, காது கேட்கும் தன்மையை இழந்து, பெருமூச்சு விட்டுக்கொண்டு, செயல்கள் தடுமாற்றம் அடைந்து, கொடிய கோபத்துடன் கூடிய சொற்களோடு குரலை வெளிப்படுத்தி, வெளிப்படும் மூக்குச்சளியும், நெஞ்சுக்கபமும் கோத்தது போல் ஒன்று சேர்ந்து துன்ப வெறியை அதிகரிக்கச் செய்து, இத்தகைய உடலில் புகுந்து என் உயிர் தவிப்பதற்கு முன்னம், யமன் வந்து என்னுயிரை எடுக்கும் தவிர்க்க முடியாத செயலை அகற்றி, உன் அழகிய திருவடியில் சேர்த்து, சிறிது அருள் புரிவாயாக. உலகின் அரணாக நிற்கும் பொன்மலை மேருவை வில்லாக வளைத்து, பகைவராகிய திரிபுரத்தாருடைய அரண்களை அழித்தவராகிய சிவபிரானின் குருநாதனே, கானகத்தில் குறப் பெண் வள்ளி தேவிக்கு என்னைக் காத்தருள் என்றெல்லாம் பல நயமொழிகள் கூறியவனே, வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என (ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே, சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே, புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.
* மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையே சிறந்தது என்று சங்கப் புலவர்களிடையில் ருத்திரசன்மனாக முருகன் வந்து நிலை நாட்டினான் - திருவிளையாடல் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 92 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தத், தத்தன, வந்து, ருத்திரசன்மனாக, பெருமாளே, அடைந்து