பாடல் 91 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் -
செஞ்சுருட்டி; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான ...... தனதானா |
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே திந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான சிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே. |
மொழிகளில் முந்தியுள்ள தமிழில் பாமாலைகளை கோடிக்கணக்காக சந்தப்பா வகையில் நீண்டனவாகப் பாடிப்பாடி, அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல், முன்ஜென்ம வினை என்பதே என்னைத் தொடராமல் ஓடிப்போக பெண்ணாசை என்பது தூரத்தே ஓடிப்போக முந்தவேண்டும் என்ற ஆசைகொண்ட அடிமையேனை ஆண்டருளும் பொருட்டு என் முன்னிலையில், (அதே ஒலி) என்ற தாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும் சிவந்த சிறிய கால்களை உடையதும், விரித்த தோகையை உடையதும், பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வை கொண்டதும், தீரமும், செம்பொன் நிறத்தையும் கொண்ட மயில்மீது, எப்போது தான் வரப்போகிறாயோ? அழகிய அருள்மிக்க வேத வேள்விக்கெல்லாம் காவல் புரியும் பெருமானே, செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை மாலைகளாக அணிந்துகொள்பவனே, தேவர்களுக்கெல்லாம் உபகாரியே, சேவலைக் கொடியாக உடையவனே, சிரத்தின்மேல் கைகூப்பித் தொழுவோரின் அன்பு பூண்டவனே, (கிரெளஞ்ச) மலையை ஊடுருவும்படி ஏவின வேற் கரத்தோனே, அழகு மிகப் பொலியும் திருவுருவம் கொண்டவனே, அழகு நிறைந்த தேவயானை விரும்பும் இன்பம் வாய்ந்தவனே, அழகிய குறப்பெண் வள்ளியுடன் பொழுதுபோக்கும் மெய்க்காவலனே, இன்சொற்களால் போற்றும் அடியார்கள் மீது அன்பு கொண்டவனே, எதிர்த்துவரும் பெரும்போரில் பகைவரை மாய்க்கும் மாயக்காரனே, பெரும் போரில் சூரனை சூறாவளிக் காற்றுப் போல் அடித்துத் தள்ளியவனே, திருச்செந்தூர் நகரில் வாழும் ஆட்சித் திறன் படைத்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 91 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், தந்ததன, அழகிய, அன்பு, கொண்டவனே, உடையதும், அழகு, பெருமாளே, தேடித், தேடி, தகிட, ஓடிப்போக