பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ்

ராகம் -
மத்யமாவதி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தனனத்த தான தனனத்த தான தனனத்த தான ...... தனதான |
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை கரிமுத்து மாலை ...... மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை ...... யரவீனும் அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி னடைவொத்து லாவ ...... அடியேன்முன் அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே மழையொத்த சோதி குயில்தத்தை போலு மழலைச்சொ லாயி ...... யெமையீனு மதமத்த நீல களநித்த நாதர் மகிழ்சத்தி யீனு ...... முருகோனே செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை திருமுத்தி மாதின் ...... மணவாளா சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான திருமுட்ட மேவு ...... பெருமாளே. |
கரும்பு தரும் முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை, யானை தரும் முத்தாலான மாலை, மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை, கடலில் பெறப்படும் முத்தாலான மாலை, பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை, இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய, அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில் இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்து அருள் புரிவாயாக. மேகம் போன்ற நிறத்தை உடைய ஜோதி உமை, குயிலும் கிளியும் போன்று மழலை மொழி பேசும், எம்மை ஈன்ற, தாய், பொன் ஊமத்தைமலரை (ஜடையில்) அணிந்தவரும், நீல நிறம் கொண்ட கழுத்தை உடையவரும், என்றும் அழியாது இருப்பவருமான தலைவர் சிவபிரான் மகிழ்கின்ற சக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகனே, செழிப்புள்ள முத்துமாலை பூணும் மார்பை உடைய, அமுதமயமான தேவயானை, மேலான முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளனே, சிறையில் தேவர்களை வைத்த சூரர்கள் அவர்களுக்குப் பூட்டிய விலங்கைத் தறித்து எறிந்தவனே, ஞானனே, திருமுட்டம்* என்ற தலத்தில் அமர்ந்த பெருமாளே.
* திருமுட்டம் இப்போது 'ஸ்ரீமுஷ்ணம்' என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மாலை, முத்தாலான, தரும், தனனத்த, சக்தியாம், உடைய, கிடைக்கும், மேகம், மார்பி, பெருமாளே