பாடல் 724 - சிறுவை - திருப்புகழ்

ராகம் - ஸிந்து பைரவி
தாளம் - கண்டசாபு - 2 1/2
- எடுப்பு - 3/4 தள்ளி
தாளம் - கண்டசாபு - 2 1/2
- எடுப்பு - 3/4 தள்ளி
தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன தனதான ...... தனதான |
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. |
தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில் குடிபுகச்செய்து, நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி அவர்களை மடியச்செய்து, தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து, காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய, விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய, பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க, லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற, வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும். தாமரை போன்ற கண்களை உடையவனே, தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே, பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே, குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே, செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே, நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே, எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட குளிர்ந்த சிறுவைத்தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 724 - சிறுவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தந்ததன, குளிர்ந்த, உள்ளது, நிறைந்த, உள்ளோரும், பெருமாளே, மிகக், உடையவனே