பாடல் 709 - கோடைநகர் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த ...... தனதான |
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே. |
கற்றுள்ள நூல்களும் மதங்களும் விளக்கம் தர முடியாத சிவதத்துவமாகிய உண்மை ஒளியானது என்றும் நிலைத்திருக்கவேண்டி, மேகம்போல் படர்ந்த மண்டை ஓடாகிய வெளியிடத்தும், நாசிக்குள்ளும் ஓடுகின்ற பிராணவாயுவாகிய ஒன்றை, அது செல்லும் வழியை மாற்றி, சுழுமுனையில் கூட்டி*, அதனால் தளர்கின்ற உடம்பின்மீது நேசம் வைத்து, சிவயோக நிலையில் நிற்காது அலைபாய்ந்து, மயிர்த் தொளை எங்கும் உயிர் பாய்ந்து ஓடும்வண்ணம், கர்மயோகச் சமாதி நிலையைப் பூண்டு, மோகம் என்கின்ற பேய் நிரம்பியுள்ள இந்த உலகில் இறந்துபோதல் என்பது என்றைக்கும் நீங்காதோ? அலை வீசும் கடல் வலிமை குன்ற, பிரமன் என்கின்ற குயவன் அஞ்சி நிற்க, மேலே எதிர்த்துவந்த சூரனை வதம் செய்த ஒளி வேலனே, வீரம் உள்ளன என்ற புகழைப் பெற்றுள்ள (மன்மதனது) ஐந்து மலர்க் கணைகளால் காம மயக்கம் கொண்டு வேடர்குல வள்ளியின் பாதங்களில் அன்று விழுந்தவனே, அச்சம் அடைந்து போய் ஒதுங்கும்படி, மாமனாகிய தட்சனை தயங்காது தலையை அரிந்தவரும், பயனற்ற திரிபுரத்தைப் பகைத்து எரித்தவருமான சிவபெருமான் தந்த இளையோய், கோழிக்கொடியைக் கொண்ட அழகிய குமரனே, வீரனே, கோடைநகரில்** வாழ்கின்ற பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 709 - கோடைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, என்றும், பிங்கலை, தானத்த, பத்து, இடைகலை, நாடிகளுள், ஒன்று, சுழு, யும், உள்ளது, முனை, சுவாசம், விடும், உள்ள, பெருமாளே, கொண்ட, கொண்டு, செல்லும், சிவயோக, காற்றுக்கு, என்கின்ற, பெயர்