பாடல் 692 - திருமயிலை - திருப்புகழ்

ராகம் -....;
தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான |
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப் பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு பருவரதி போல வந்த ...... விலைமானார் பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க கலபமயில் மேலு கந்த ...... குமரேசா கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே. |
தமக்கு ஒப்பில்லாதனவான இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு இரண்டு காதுகளின் மேலே நெருங்கிப் போர் தொடுத்து, விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்திய மலர் அம்பைக் காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும், கச்சணிந்த அதிக பாரமான பெரும் மார்பகங்களின் மீது முத்து மாலை அணிந்தவர்களும், விளங்கும் இளமை வாய்ந்த (மன்மதனின் மனைவி) ரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள் மேற்கொள்ளும் தொழிலில் நான் சுழன்று அலைந்து, அவர்கள் மீது காம இச்சை என்னும் பெருங்குழியிலே மயங்கி விழலாமோ? கண கண என்ற ஓசையோடு ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகை மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமரேசா, கோபித்து வந்த சூரனுடைய உடல் இரண்டு பிளவாகப் பிரியும்படிச் செய்து, அவன் அலறி விழும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, அழகிய முடியாகிய சடையில், கொன்றை, அறுகம்புல், பிறைச் சந்திரன், கங்கை இவற்றை அணிந்துள்ள, (மேரு) மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது ஒரு பாகத்தில் உள்ள, மலை அரசனாகிய பர்வத ராஜனுடைய மகளான, பார்வதியின் செல்லக் குழந்தை என்னும்படி வளர்ந்து, திருமயிலைத்தலம் சிறப்புடன் வாழும்படியாக அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 692 - திருமயிலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, இரண்டு, தனதனன, வந்த, என்னும்படி, செலுத்திய, மீது, விளங்கும், குமரேசா, ரண்டு, ணிந்த, விழலாமோ, கொன்றை, பெருமாளே