பாடல் 310 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
...........; தாளம் - ........
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங் கடகசங் கத்துப் பொற்புய வெற்பன் கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக் கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன் குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங் கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய் குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென் றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங் குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந் திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங் குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண் தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந் தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ் சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன் கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந் தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும் தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன் சசிதரன் திக்குக் கத்தர கத்யன் திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ் செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம் செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும் சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. |
பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவாள் முதலிய கூட்டங்களை அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன், கடலிலே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த சிவந்த சக்தி வேலை ஏந்திய தாமரைக் கரங்களை உடையவன், குமரன் என்று பூஜித்து, அத்தகைய பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும், உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண* வள்ளலே என்றும் உவமைகள் கூறி, இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய நூல்களிலிருந்து) திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும், (தங்கள் பெருமைக்கு) மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ? ஜனக மன்னன் அன்புடன் பெற்ற அழகிய (சீதையாகிய) பெண்ணுடைய ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் சக்கரம் (ஆக்ஞை) நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் (அரக்கர் குலச்) சுற்றத்தார் யாவரும் சுடப்பட்டு அழியும்படி, கொடிய போர் வல்ல, கோபம் கொண்ட, வீரம் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசும் பத்துக் கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின் இடர்களை நீக்கிய திருமாலும், சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய ஈசான்யனும், (எட்டுத்) திக்கு பாலகர்களும், அகத்திய முனிவரும், பிரமனும், புகழ் பெற்ற வசிஷ்டரும், கூட்டமான வேதங்களும், லோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற ஞானிகளும், பின்னும் சிவ பெருமானும் வணங்கி நிற்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* தமிழ் வள்ளல்கள் எழுவரில் ஒருவன் குமணன்.தமிழுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமானவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 310 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், ஒப்பற்ற, பெற்ற, தத்தம், தத்தத், தத்தன, தனதனந், கொண்ட, தூய்மை, தங்கள், வாய்ந்த, உடையவன், பத்துக், பெருமாளே, அழகிய, எல்லாம்