பாடல் 265 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக் குடையிட் டகுறைப் ...... பிறையாலே குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக் குயிலுக் குமினித் ...... தளராதே இவளைத் துவளக் கலவிக் குநயத் திறுகத் தழுவிப் ...... புயமீதெ இணையற் றழகிற் புனையக் கருணைக் கினிமைத் தொடையைத் ...... தரவேணும் கவளக் கரடக் கரியெட் டலறக் கனகக் கிரியைப் ...... பொரும்வேலா கருதிச் செயலைப் புயனுக் குருகிக் கலவிக் கணயத் ...... தெழுமார்பா பவளத் தரளத் திரளக் குவைவெற் பவையொப் புவயற் ...... புறமீதே பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப் பதியிற் குமரப் ...... பெருமாளே. |
(ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்), பழிச்சொல் பேசி நெருங்கிவரும் மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனிமேல் தளராதவாறு, (உன் மேல் காதல் கொண்ட) இந்தப் பெண்ணை துவள்கின்ற கூடல் இன்பத்துக்கு விரும்பி அழுத்தமாகத் தழுவி, உன் தோள்களின் மேல் விளங்கும் இனிமையான (கடப்ப) மாலையை ஒப்புதல் இல்லாத அழகுடன் இவள் அணிந்து கொள்ள, கருணையுடன் நீ தந்தருள வேண்டும். உணவு உண்டை உண்பனவும், மதம் பாயும் சுவட்டை தாடையில் கொண்டனவுமான யானைகள் எட்டும் (அஷ்ட திக்கஜங்களும்) அலறிப் பயப்பட, பொன் மலையாகிய கிரெளஞ்சத்துடன் போர் செய்த வேலனே, அசோக* மலர்க் கணையைத் தோளில் ஏந்திய மன்மதனின் வேண்டுமென்றே அம்பெய்த செயலால் (வள்ளியைத் தழுவ) மனம் உருகிச் சேருதற்கு விரும்பி எழுகின்ற மார்பனே. பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள் மலை போல் கிடக்கும் வயற் புறங்களின் மேல் சங்கின் கூட்டங்கள் நிறைந்த திருத்தணிகை என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே.
* மன்மதனுடைய ஐந்து கணைகளாவன: தாமரை, மா, அசோகம், முல்லை, நீலோற்பலம். அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் செவிலித்தாய் பாடுவதுபோல் அமைந்தது.மன்மதன், அவனது மலர்க் கணைகள், சந்திரன், பழிச்சொல் பேசும் மங்கையர், குயில் ஓசை இவையெல்லாம் தலைவனைப் பிரிந்த தலைவியின் விரகதாபத்தைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 265 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், மேல், விரும்பி, மலர்க், பழிச்சொல், மன்மதனுடைய, கலவிக், குமரப், பெருமாளே