பாடல் 263 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான |
குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர் கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல் மருவு புயத்திடை பணிக ளணப்பல கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன் வரிய பதத்தினி னருவி யிருப்பிடம் அமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம் வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா அரிய திரிப்புர மெரிய விழித்தவன் அயனை முடித்தலை யரியு மழுக்கையன் அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே அமண ருடற்கெட வசியி லழுத்திவி ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே. |
குருவி போலவும், பல கழுகுகள் நரிகள் கூட்டம் போலவும், அரிய காட்டில் உள்ள விலங்குகள் போலவும், புழு, குறவை மீன் போலவும், யானை போலவும், மரம் போலவும் திரிபவர்களுடைய நட்பு கூடாது. குமரிப் பெண்களால் வரும் மனக் கவலை தரும் செயல்களில் படிந்து, மனத்துயரும் கொடுமைகளும் நோய்களும் வருத்த, அலைந்து திரிகின்ற நிலை கெட்டவன் இவன் என்றும், இழிவானவன், தரித்திரன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிகாசம் செய்யாமல், பொருந்திய தோள்களில் அணிகலன்கள் நெருங்கி விளங்கவும், பல யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர, பட்டு ஆடைகளை உடுத்தி, ஒப்பற்ற மன்மதனின் வியாபாரப் பண்டம் இவன் என்று (கண்டோர் வியக்க), பொன்னாலாகிய பல்லக்கில் செல்லும் பெருமையை நான் தேட மாட்டேன். இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். (ஆதலால் அத்திருவடியைச்) சேருதற்குரிய திருப்புகழ் பாக்களை நான் பாட எனக்கு அருள் புரிவாயாக. விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம் வெற்றி முழக்கமாக, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனவும், குகு என்றும் பல தாளங்கள் அச்சம் தரும்படியாக ஒலித்து, புகழ் பெற்ற ஆதிசேஷனுடைய மணிமுடித் தலைகள் நெறுநெறு என்று இடிபட, திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி அடைபட, தங்கள் கூட்டம் அழியும்படி சண்டை செய்த அசுரர்கள் சிதறுண்டு முறிய செலுத்திய வேலனே, அரிய திரி புரங்கள் எரிந்து விழ (நெற்றிக் கண்ணால்) விழித்தவனும், பிரமனது முடித்தலையை அரிந்த மழுவை ஏந்திய கையை உடையவனும், எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவனுமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, (திருஞான சம்பந்தராக வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில் ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன் அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 263 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, போலவும், திமித்திமி, அரிய, டடுட்டுடு, விகிர்த, இவன், என்றும், திமித, ரிரிரி, விதமி, குறவை, தரும், குருவி, நெருங்கி, குகு, நான், உள்ள, மருவு, தாளம், விருது, முடித்தலை, திருத்தணி, பெருமாளே, மலையில், கூட்டம்