பாடல் 249 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் -
மாயாமாளவகெளளை; தாளம் - ஆதி
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் ...... பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் ...... குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண் பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் ...... புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் ...... முருகோனே தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல் எடுக்கின்ற தேகங்களுடன் பிறந்து (பின்னர் அவை) இறந்து போகும் வெட்கம் இல்லாத என் பிறப்பு ஓய்வு பெற, உன்னை பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள் அவர்களது இருப்பிடம் சென்றடைந்து விளக்கும் அறிவுரையை விட்டுவிலகாது ஒளி பொருந்திய உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ? தன் தொழிலில் திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம் (மன்மதன்) வெந்து விழும்படி அந்த மன்மதனைக் கொன்றவனாகிய சிவன் நீயே (பிரணவப் பொருளை) இனி உரைப்பாயாக என்று கூறிட பிரமனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே கோபத்துடன் சூரனைக் கடுமைகொண்ட வேலால் (அவனது) சிரத்தை அறுத்த முருகோனே தினைப்புனத்தில் வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 249 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தானம், பொருளை, பெருமாளே, தனைக்கொடு, முருகோனே