பாடல் 215 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான |
கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர் யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர் காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ ராஜத லக்ஷண லக்ஷ¥மி பெற்றருள் ...... பெருமாளே. |
அழகிய மலை போன்ற மார்பகங்களை உடையவர். காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர். மனத்தை உருக்குபவர்கள். கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை தினந்தோறும் விற்பவர்கள். மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகிய விழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள். தந்திரத்துடன் நறும் அகில் மணம் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர்கள். எவரையும் ஏமாற்றி வீட்டுக்குள் அழைப்பவர்கள். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர்கள். நன்னெறி பொருந்தாத வகையில் (தமது) ஆடையைத் தளர்த்தி பிறகு இடுப்பில் சுற்றியும் உடுப்பவர். தம்மிடம் வருவோர் பொருளை அபகரிக்க (பல விதத்தில்) இடையிலே விழுந்து சேர்பவர்கள். வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே, கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும், இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே, திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே, ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே.
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** அக்கினி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாக அமைந்தான். ஆதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச, சூரனின் நிணக் குடல் நெருப்புக்கு இரையாயிற்று எனப் பொருள்படும். சூரன் இறந்த பின்தான் அவனது உடல் மயிலாகவும், சேவலாகவும் பிரிந்து முருகன்வசம் அடைக்கலம் ஆனது. பின்பு முருகனது கொடியில் அக்கினிக்குப் பதிலாக சேவல் வீற்றிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 215 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, என்னும், அழகிய, மலையிலும், தானன, குயில், கோழி, சிறந்த, சூரன், இருக்கின்ற, கற்று, மயில், மாமர, டுப்பவர், சூரனை, மாகிரி, பெருமாளே, ராஜத, காடை