பாடல் 213 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தனதனன தனனா தனத்ததன தனதனன தனதனன தனனா தனத்ததன தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான |
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர் குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர் தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும் தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள் முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள் தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள் வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில் தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய் தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே. |
குமரனே, குருவான மேலோனே, முருகனே, குகனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சரவணனே, அசுரர்களைக் கலக்கியவனே, பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானுடைய குருவாக அமைந்து சிறந்த உபதேச மொழியைப் போதித்த மயில் வாகனனே, எனக் கூறி நாள் தோறும் நான் மனம் உருகாமல் குயிலைப் போன்ற பேச்சுக்களை உடைய அழகிய விலை மகளிர், கண் பார்வையால் மனதை உருக்குபவர்கள், தெருவில் எப்போதும் அன்னம் போல நடப்பவர்கள், (தம்மைப்) பார்த்து மகிழ்பவர்களுடைய பொருளையும் மனதையும் உடனே அபகரிப்பவர்கள், யாவரும் தமது வசத்தில் அகப்படும்படி வசீகரித்து முகத்தை மினுக்குபவர்கள், (வேண்டுமென்றே) மார்பகங்கள் மீதுள்ள துணியைச் சரிய விட்டு நடுத் தெருவில் நிற்பவர்கள், பொருள் இல்லாது தம்மிடம் வருபவர்களுடைய மனம் புண்படுமாறு நழுவியும் மழுப்பியும் செல்பவர்கள், கண் வலையால் (அவர்களுக்கு) வஞ்சனை செய்தும், அவரவர் கொடுத்த பொருளுக்குத் தக்கபடி மகிழ்ச்சியுற படுக்கையில் உருக்குபவர்கள், ஆகிய விலைமாதர்களின் வசத்தே ஒழுகி, அவர்களின் அடிமையைப் போல அந்த மாதர்கள் இட்ட தொழிலில் திரிந்து உழலும் முட்டாளாகிய என்னை உனது திருவடியைப் போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக. போர் செய்யக் கருதி அசுரர்களின் சேனை போர்க்களத்தில் எதிர்த்து வந்து போது, ஒரு நொடிப் பொழுதில் அவர்களுடைய சேனை அழிய வேலாயுதத்தைச் செலுத்தி, பூமியில் அசுரர்களுடைய தலைகள் உருண்டு விழும்படி தூள்படுத்திவிட்ட போர்க்களத்தில் தாகத்துடன் பேய்கள் கூத்தாடவும், வீரபத்திரர்கள் (சிவ கணங்கள்) ஆரவாரம் செய்யவும், கொழுப்புடன் இரத்தத்தைக் குடிக்கின்ற காளி கொக்கரிக்கவும், சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில் பேரொலி எழுப்பவும், நரிகள், காகங்கள், கழுகுகள் இவை கூத்தாடவும், ரத்த வெறி கொண்ட பயிரவர்கள் சுழன்று திரியவும், ஒப்பற்ற வேலாயுதத்தை விட்ட, அஞ்ஞான இருளைப் போக்கும் சூரியனே, தேவர்கள் அரசனான இந்திரன் பொன்னுலகைப் பெற்று உலவ உதவிய முருகோனே. லக்ஷ்மி மருவுகின்ற தோள்களை உடைய திருமாலும், பிரமனும், ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனும் வந்து வணங்குகின்ற பழனி மலையிலும், கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ சமயத்தவனே, ஆறுமுகனே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 213 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தனத்ததன, தனனா, சேனை, போர்க்களத்தில், கூத்தாடவும், தெருவில், வந்து, மனம், குகனே, முருகோனே, பெருமாளே, உடைய, உருக்குபவர்கள்