பாடல் 179 - பழநி - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி ; தாளம்
- அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான |
போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் ஸாமீ நமோநம ...... அரிதான வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான மேனி தங்கிய வேளே நமோநம வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய் பாத கஞ்செறி சூரா திமாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே பாதி சந்திர னேசூ டும்வேணியர் சூல சங்கர னார்கீ தநாயகர் பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர் ஆதி சங்கர னார்பா கமாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. |
ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி, நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி, இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி, அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி, வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி, தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி, அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி, மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி, வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி, தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி, வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி, உனது திருவருளைத் தந்து உதவுவாயாக. தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து, பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே, பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும், திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும், வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும், அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும், அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட, அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 179 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, நிறைந்த, தனாதன, தானா, தந்தன, அணிந்த, அழகு, உடைய, தேவர்கள், சங்கர, தங்கிய, தகதிமி, வேளே, தகிட, பெருமாளே, தலைவனே