பாடல் 176 - பழநி - திருப்புகழ்

ராகம் - சாருகேசி ; தாளம் -
ஆதி - 2 களை
தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான |
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக் கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும் பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப் பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக் குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா படியிற் பெருமித தகவுயர் செம்பொற் கிரியைத் தனிவலம் வரஅர னந்தப் பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக் கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற் பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே. |
பூமிக்கு உடுக்கப்படும் ஆடை எனப் பரந்துள்ள அந்த எட்டுத் திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர், எட்டுக் கண்களை உடையவரும், சுத்தமான நூற்றிதழ்த் தாமரையில் நிலையாக இருப்பவருமாகிய பிரமனாகிய நான்கு வேதத்தோன், திரிபுரங்கள் அழிந்து எரி கொள்ளும்படி நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வீசி, வன்மையுடன் சற்றுச் சிறிய புன்னகையைக் கொண்ட அற்புதத் தலைவரும், பாவங்களை அழிக்கவல்லவருமான பரம சிவன், ஆக இந்த ஒப்பற்ற மூவர்களுடைய சித்தம் நிறைந்து தெளிவுறும் வண்ணம், அவர்களது மேலான செவிகளில், பிரணவப் பொருளை, ஆர்வமாக (உனது திரு வாயில் தோன்றிய) உபதேச மொழிகளால் விளக்கிய, குழந்தை உருவில் வந்த குரு நாதனே, போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் தமது படைகளைக் கொண்டு சண்டைக்கு வலிய இடம் தந்ததால், அவர்களுடைய குலம் முழுவதும் அழியும்படிச் செய்தும், உக்கிரமாக, கோபம் பொங்க, குலமலைகள் யாவும் பொடிபட்டு உதிரச் செய்தும், விரிந்த அண்டச் சுவர்கள் பிளவுபட்டு அதிர்ச்சி அடையச்செய்தும், அண்டத்து உச்சி கிழிபட்டு, அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளி எல்லாம் கிடுகிடு என்று சத்தம்படும்படி, போரிட்டு, கையில் உள்ள வேல் (பகைவர்களின்) கொழுப்பை உண்ண, ரத்த நீர் ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக, குதிரையாகிய சிறந்த மயிலைச் செலுத்திய அற்புதக் குமரேசனே, பூமியில் மேன்மையும், தகுதியும் மிக்க செம் பொன் மலையாகிய மேருவை, தனித்து நீ வலம் வர, சிவபெருமான் அந்தப் பரிசுப் பழத்தை (உன் அண்ணன்) யானைமுகன் கணபதிக்குக் கொடுத்த நியாயமற்ற தன்மையாலே, (அந்தச்) சிவன் வெட்கம் கொள்ளும்படி, உள்ளத்தில் மிகக் கோபம்கொண்டு, அந்தப் பழத்தைத் தரவில்லை என்று, அருள் பாலிக்கும் திருச்செந்தூரிலும், பழனிச் சிவகிரியிலும் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 176 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனனத், தந்தத், வந்த, அந்தப், சிவன், செய்தும், உள்ள, கந்தப், பெருமாளே, கொள்ளும்படி