பாடல் 1280 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானனா தத்ததன தானனா தத்ததன தானனா தத்ததன ...... தனதான |
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன் வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும் வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை யாடிமோ கித்திரியும் ...... வெகுரூப கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி காரமோ டத்தெளிய ...... அரிதான கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி கூடலா கப்பெருமை ...... தருவாயே வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ வாளிபோ டக்கருது ...... மநுராமன் வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும் நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே. |
வேலாயுதத்தையும், வாளையும், கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று கொண்டு நிலை கெடுகின்ற பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும், தெளிந்து அறிவதற்கு அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும், மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான பெருமையைத் தந்து அருள்வாய். வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால், விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே, மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே, அன்பு கூடும்படி, மயில் போன்ற குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.
* இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு (கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என, சத்யபாமையின் வேண்டுகோளுக்கு இரங்கி கருடன் அச்செடியைப் பறித்து சத்யபாமையின் வீட்டில் நட்டார். இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர் செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1280 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனா, விட்டு, தத்ததன, மயங்கி, சத்யபாமையின், தேவர்கள், வந்த, நிலை, பெருமாளே, இந்திரன்