பாடல் 1263 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தம் ...... தனதான |
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு பேணிக் கரங்கொண் ...... டிருகாலும் பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி பேதித் தளந்தம் ...... புவியூடே வரவிட வருமுட லெரியிடை புகுதரு வாதைத் தரங்கம் ...... பிறவாமுன் மரகத மயில்மிசை வருமுரு கனுமென வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே அருவரை தொளைபட அலைகடல் சுவறிட ஆலிப் புடன்சென் ...... றசுரேசர் அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா இருவினை யகலிட எழிலுமை யிடமுடை யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும் ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே. |
சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின் துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன் இரண்டு கால்களும் பெறும்படியாக உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து, அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு, உலகிடையே பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்) நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன், பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக. அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச் சென்ற அசுரர்கள் எல்லோரும் மடிந்து அழிய சண்டை செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே, (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி, அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத் திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே, இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு அதிக இரக்கம் காட்டும் பெருமாளே.
* முதல் வரியிலிருந்து பிரமனும் என்ற சொல் அன்வயப்படுத்தி உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1263 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்னும், அழிய, வந்து, இரண்டு, பிரமனும், பெருமாளே