பாடல் 1233 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தன்னன தனதன தன்னன தனதன தன்னன தனதன ...... தனதான |
கன்னியர் கடுவிட மன்னிய கயலன கண்ணிலு மிருகன ...... தனமீதுங் கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி லிந்நிலை பெறவிங ...... னுதியாதே யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை யென்னையும் வழிபட ...... விடவேணும் பொன்னவ மணிபயில் மன்னவ புனமற மின்முலை தழுவிய ...... புயவீரா புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல் எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா தன்னிறை சடையிறை யென்முனி பரவரு இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில் சண்முக மழகிய ...... பெருமாளே. |
பெண்களின் கடுமையான விஷம் பொருந்திய, கயல் மீன் போன்ற கண்களிலும், இரு மார்பகங்கள் மீதும், கல் போன்று உறுதியான வேலைத் திறம் பொருந்திய மன்மதன், உருவம் இல்லாதவன், (மலரம்பை எய்வதானால்) மென்மை சேர்ந்த அப்பெண்களின் உருவத்தின் மீதும் காம மயக்கம் கொண்டு, துன்பம் ஏற்படுகின்ற வீடாகிய இந்த உடலுடன் இன்னமும் இந்த உலகிடையே இதே அவல நிலையை அடையும்படி, இவ்வாறு நான் பிறவாமல், உன்னைத் தியானிக்கும் அடியார்கள் அடைந்துள்ள உனது திருவடியின் மீது வழிபாடு செய்யுமாறு என்னையும் அந்த நன்னெறியில் செலுத்த வேண்டுகிறேன். பொன்னாலாகிய நவ மணி* ஆபரணங்களை அணிந்துள்ள அரசே, தினைப் புனத்தில் உள்ள வேட்டுவக் குலத்து ஒளி தரும் (வள்ளியின்) மார்பைத் தழுவிய புயங்களைக் கொண்ட வீரனே, புண்ணியம் செய்து சுவர்க்கத்தில் வாழும் பல தேவர்கள் தொழுது நிற்கும் முதல்வனே, கிரவுஞ்ச கிரி, (அசுரருக்கு அரணான) எழு கிரி ஆக எட்டு மலைகளுடன் சண்டை செய்த, ஒளி வீசும் வேலை உடையவனே, தனக்குத் தானே தலைவனான, சடையை உடைய சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுளைத் துதிப்பதற்கு அருமையான இனிய இசை அமைந்த தமிழ் மறையை (தேவாரத்தை, திருஞானசம்பந்தராக வந்து) உலகோர் தெரியச் சொன்னவனே, குளிர்ந்த கருணையைப் பாலிக்கின்ற ஒப்பற்ற பன்னிரண்டு கண்களைக் கொண்ட ஆறு திருமுகனே, அழகு வாய்ந்த பெருமாளே.
* ஒன்பது மணிகள்:வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1233 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தன்னன, தனதன, கொண்ட, கிரி, மீதும், பெருமாளே, தழுவிய, பொருந்திய