பாடல் 1202 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த ...... தனதான |
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர் கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும் நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும் ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே. |
வெற்றி கொண்ட அழகிய கையில் உள்ள வேலாயுதத்தை நிகர்த்து, மன்மதனுடைய கொடிய மலர்ப் பாணங்களாக மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும், இரண்டு தோள்களை மூங்கிலை நிகர்க்கும் என்றும், மார்பகங்கள் மேலான மலைக்கு ஒப்பானவை என்றும், கூந்தல் (கரு நிறத்தில்) மேகத்தையும் வென்றது என்று கூறியும், அழகிய (விலை) மாதர்களின் எழிலினை மேலான வகையில், விரும்பத் தக்க சொற்கள் கொண்டு அலங்கரித்துப் பேசி, வஞ்சக மனம் உடைய அப் பொது மகளிர்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே காலம் கழிக்காமல், குற்றம் இல்லாத உன் திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிகுந்து பெருகுதற்கு வேண்டிய மனத்தை அடைய மாட்டேனோ? பூமியை முன்பு ஓரடியால் (வாமனனாக வந்து) அளந்து, பாற்கடலினிடையே துயிலும் தன்னை நாடி ஓலமிட்ட (கஜேந்திரன்) என்னும் யானையின் முன்பு வந்து உதவிய திருமாலும், உனது உதவியை நாட, விசாலமான கிரவுஞ்ச மலையையும், மாமரமாக வடிவெடுத்த சூரனையும் பிளந்து நெருங்கி, மலைப் பிரதேசங்கள் எல்லாம் குலுங்கி அசையும்படி வேலைச் செலுத்திய வேலனே, ஒலித்து எழுந்து நெருங்கி வந்த ஆலகால விஷத்தைப் பருகி அடக்கிய கழுத்தை உடையவர், தமது உடலில் மங்கையாகிய பார்வதிக்கு இடது பாகம் தந்தவர், நடனம் ஆடுபவர் ஆகிய முதல்வராகிய சிவ பெருமானுக்குப் பிள்ளை என்று விளங்கி, நீதி நெறியில் நிற்கும் அன்பர்களுக்கு, அவர்களுக்கு ஆபத்து நேரிடும் போதில் அஞ்ச வேண்டாம் என்று அருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1202 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தானத்த, முன்பு, வந்து, நின்று, என்றும், மேலான, நெருங்கி, கூறியும், வந்த, தென்று, திருமாலும், பெருமாளே, அழகிய