பாடல் 1062 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான |
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் மனது போற்கரு கினகு வாற்குழல் வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி அவுணர் கூப்பிட வுததி தீப்பட ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. |
எங்கள் வீட்டுக்கு வருக என்று அழைக்கும் சாமர்த்தியசாலிகளின் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்னும்படியான விலைமாதர்களுடைய மனதைப் போன்று கருமை நிறமான அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், உண்ணத்தக்க பாற்கடலில் உள்ளதும், நற்சுவை நிறைந்ததுமான பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், பாட்டுக்களைப் பாடி அடி நாயாகிய நான் ஈடேறாமல் அழிந்து போவேனோ? அருகில் இருந்து பார்வதி மனம் கசிந்து உருகிக் கருதி நோக்க, ஒரு கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபிரானின் செல்வமே, கோகோ என்று அசுரர்கள் அலறும்படி (போர்க்களத்துக்குச்) சென்று, அவர்கள் அலறிக் கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், ஹா ஹா சூரனே, போகாதே, இப்படி மீண்டும் வா என்று அவன் பின் ஓடி, கிரெளஞ்சம் என்னும் பேரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி செலுத்திய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் செய்து, வஜ்ராயுதம் ஏந்திய அரசனாகிய இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவனே, தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1062 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, வேளே, கோகோ, பெருமாளே, தானோ, என்றும், தேனோ, பாலோ, வருக, வாளோ, மானோ, வானோ, தாத்தன