கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே. |
65 |
என் உயிர் போன்ற இந்தப் பெண், விழிகளில் நீர் சொரிந்து கொண்டு, மயங்கி நிற்கிறாள், செந்திலாண்டவன், தன்னுடைய திருத்தோள்களை, எனக்குக் கொடுத்து அருள மாட்டார் என்கிறாள், சந்திரனை, தினமும், வெறுத்து பேசுகிறாள், தான் இப்படி அரற்றி வருந்துவதைப் பார்த்து, மன்னித்து ரட்சிக்க மாட்டேன் என்கிறார் என்று சொல்லுகிறாள், பாண்டிய மன்னனின், சுர வருத்தத்தின், கொடுமை நீங்க, தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய, சம்பந்தப் பிள்ளை என்று கூறுகிறாள் (ஆதலால்), பிரமனின், கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற உடலுக்குள், இந்த ஆன்மா சேர்க்கபட்டு மீண்டும் பிறவி அடையாதபடி, ஆண்டு கொள்ள வேண்டும், என்னுடைய சுவாமியே அழகிய குமாரக்கடவுளே. ..
சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே. |
66 |
அலைவீசும், கடலின் கண், பெரிய போர் வீரனான, கொடிய, சூரபத்மனை, ஜெயித்தவனே, தோள்களை, விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும், நெற்றியில் திலகம் தீட்டியவளுமான, கொடி போன்ற வள்ளிநாயகிக்கு உரிய, அலங்காரமுடையவனே, சிவகுமாரனே, பரிசுத்தமான அக்கினியால், பொறி ரூபத்தில் ஏந்தப் பட்டவனே, ஐராவதத்தையும், மேகத்தையும், வாகனமாக உடைய இந்திரனின், சிறையை மீட்டுக் கொடுத்த, பரிசுத்த மூத்தியே, வலிய, மயக்கத்தைத் தரும், இருவினைகளாகிய மலையை, மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிதற அடித்து விடு. ..
சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச் சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ் சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே. |
67 |
மயில் வாகனத்தை, தாவிச் செலுத்தும்படி, ஆர்பாரிக்கும், கடலின் கண், செலுத்தி, அந்த வீரம் வாய்ந்த, திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுர கூட்டங்களை, கோபித்து அழித்தவனே, தந்தம் உடைய, பாம்பு போன்ற நாகாசல வேலவனே, தெய்வீகமாகிய, குறப்பெண்ணாகிய வள்ளி தேவியை, பார்த்து, பணிவுடன், உன் மலர் போன்ற கைகளை, தலைக்கு மேல் கூப்பிக் கோண்டு, ஏ பெண்ணே உன்னுடைய இடுப்பு, புகழ்ந்து கூறப்படும், வஞ்சிக் கொடி போன்ற உருவம் உடையது, உன் விழி, நிலைபெற்ற, ஆபத்துக்களை எல்லாம், அகற்றி என்னுடைய ஆசை அக்கினியைத் தணிப்பதால், நான் செய்த தவத்தின் பயனே ஆகும், என்றெல்லாம் புகழ்ந்துரைத்த தலைவனே. ..
சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத சேகர வாரண மேவும் புயாசல தீ வினையின் சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார் சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே. |
68 |
அடியவர்களை பின் வாங்குதல் இல்லாத, போர் செய்வதில் வல்லமை உள்ள வேலாயுத மூர்த்தியே, வள்ளி நாயகியின், தாள்களை சிரத்தில் ஏந்தியவனே, தேவயானை, தழுவும், மலை போன்ற தோள்களை உடையவனே, (அடியார்களின்) கொடிய வினையின், வஜ்ரம் போன்ற திடத் தன்மையை, அரம் போன்று பொடி செய்பவனே, வேதங்கள் பூஜிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே, தினந்தோரும், முக்கண்ணுடைய சிவபெருமான், மால் விடையாகிய திருமாலின், கையிலிருக்கும், பாஞ்ச சன்யம் என்ற சங்கிற்கும், உன் கையில் இருக்கும், கொடியாகிய கோழிக்கும், (உன்னைச் சேர்ந்திருக்கும் இரவு காலம் நீடிக்காமல் பொழுது புலர்வதை தொனி செய்து காட்டும் சங்கும், அதே போல் சேவல் காலைப் பொழுதை வரவழைக்க கூவுவதாலும்) இரண்டிற்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, சிகண்டிதத், திகைப்படங், சிந்துர, சீகர, வாரண, சேகர, மயில், வினையின், வள்ளி, உடைய, கொடிய, பார்த்து, உயிர், கத்தமை, என்னுடைய, கடலின், தோள்களை, போர், கொடி