முத்தொள்ளாயிரம் - ஆறாம் நூற்றாண்டு
கற்பனை வளம்
கற்பனையே கவிதைக்கு உயிர். முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒவ்வொன்றும் கற்பனை ஊற்று என்றால் அது மிகையாகாது. சேர நாட்டின் வளத்தினையும், மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஒரு சேரப் புகழும் ஆசிரியர் பின் வருமாறு பாடுகின்றார்:
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, - புள்ளினம் தம் கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ நச்சிலை வேல் கோக் கோதை நாடு |
(வாய்அவிழ = விரிய; வெரீஇ = அஞ்சி; புள்ளினம் = பறவையினம்; பார்ப்பு = குஞ்சு; கௌவை = ஒலி)
இதன் பொருள்
சேறு நிறைந்த பொய்கைகள் சேர மன்னன் நாட்டில் மிகுதி. அப்பொய்கைகளில் அரக்கு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டது என்று எண்ணின. தம் குஞ்சுகளைத் தீயிலிருந்து காப்பாற்ற நினைத்துத் தம் கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த ஆரவாரம் தவிர, மக்கள் துயர் மிகுதியால் செய்யும் ஆரவாரத்தை, சேரநாட்டில் காண்பது அரிது என்கின்றார் புலவர். இதற்குக் காரணம் கூறுவார் போல, நச்சிலை வேல் கோக்கோதை என்று மன்னனைக் குறிப்பிடுகின்றார். அவன் ஏந்திய வேல் நஞ்சு பூசப்பட்டிருப்பது; எனவே, பகைவர் அவன்பால் பேரச்சம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பு.
கூடிழந்த சிலந்தி
சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது இரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள். அரண்மனைக்குப் பரிசிலர் வருகின்றனர். வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன். ஆம்! அந்தணர் வந்தனர்; அவர்கள் ஆவையும் பொன்னையும் வாங்கிச் சென்றனர். நாவன்மை மிக்க புலவர்கள் வந்தனர்; அவர்கள் மந்தர மலைபோல் உயர்ந்த களிறுகளைப் பெற்றுத் திரும்பினர். இங்ஙனம் மனிதரெல்லாம் பரிசு பெற்றுத் திரும்பிய நாள், சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் புலப்படுத்தினார்.
பண்பாட்டுச் செய்திகள்
முத்தொள்ளாயிரம் எழுந்த காலத்துத் தமிழர்தம் பண்பாட்டு நிலையை அறிய, அதன் ஆசிரியர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்.
அசுவனி முதலாக எண்ணப்படும் 27 விண்மீன்கள் பற்றிய அறிவு அன்று தமிழர்க்கு இருந்தது. மன்னிய நாண்மீன், ஆதிரையான் (1) தென்னன் திருஉத்திராட நாள் (7) என்ற குறிப்புகளை நோக்குக.
பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் இதனுள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொகுப்புரை
முத்தொள்ளாயிரம் மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 வெண்பாக்களை உடையது. கைக்கிளைப் பாடல்கள் இதில் மிகுதி. பண்டைத் தமிழர் பண்பாடு பற்றிய பல செய்திகள் இந்நூலில் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்தொள்ளாயிரம் - Muthollayiram - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நூற்றாண்டு, முத்தொள்ளாயிரம், ஆறாம், நாள், தமிழ்நாட்டுத், வேல், பெற்றுத், செய்திகள், தகவல்கள், இலக்கிய, பற்றிய, தமிழ், நூல்கள், சோழன், விட்டது, மிகுதி, புலவர், கொண்டு, | , முத்தொள்ளாயிரம், வந்தனர், உயர்ந்த, வெரீஇ, list, tamilnadu, literatures, tamil, muthollayiram, century, information, கற்பனை, பார்ப்பு, கௌவை, புள்ளினம், அரக்கு, ஆசிரியர், நச்சிலை