மணிமேகலை - இரண்டாம் நூற்றாண்டு
என்பது சாத்தனார் கோட்பாடாகும். எனவே தான் ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ (பாத்திரம் பெற்ற காதை, வரிகள் 95-96) என்பதனையே பாவிகமாகக் கொண்டு காவியம் பாடினார் சாத்தனார். அவர் பசியின் கொடுமையைப் பின்வருமாறு விளக்குவார்.
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாண்அணி களையும் மாண் எழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி (பாத்திரம் பெற்ற காதை, வரிகள்:76-80) |
இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள அறத்திலெல்லாம் சிறந்தது என்பதனை,
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை (மேற்படி வரிகள்: 92-94) |
என்று வற்புறுத்துகின்றார். மேலும் பிறர் உதவியில்லாமல் வாழ முடியாத குருடர், செவிடர், முடவர் முதலியவர்க்கு உதவுதலே உயர்வு என்பார்.
காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் காவலன் (ஆபுத்திரன் அறிவித்த காதை, வரிகள்: 111-115) |
என்ற பகுதியில், ஆபுத்திரன், இயலாத மக்கள் உண்டது போக, மிஞ்சியிருந்த உணவினை உண்டு உறங்கினான் என்கின்றார்.
இங்ஙனம் பசியின் கொடுமையை எடுத்துக்காட்டி, அதை ஒழிப்பதே பேரறம் என்று வற்புறுத்துதற்கு ஒரு காவியத்தைப் படைத்த மாபெரும் புலவனை உலகில் வேறு எங்கும் காண முடியாது.
பண்பாட்டுப் பெட்டகம்
தமிழ்ப்பண்பாட்டுக் கருவூலமாக மணிமேகலை விளங்குகின்றது. புகார், வஞ்சி ஆகிய நகர்களின் பண்பாட்டுச் சிறப்பு அழகாகக் காட்டப்பட்டுள்ளது. அறங்கூறவையம், ஐம்பெருங்குழு, எண்பேராயம் முதலியவையும், பொற்கொல்லர், தச்சர், குயவர், மணித்தொழிலாளர்,ஓவியர் முதலான பல்வினைஞர் தம் இயல்பும், திறமும் விளக்கப்பட்டுள்ளன. மாதவியின் திறன் பற்றிக் கூறுமிடத்தில் நாட்டியக் கலைஞர்க்குரிய அறுபத்து நான்கு கலைகளும் விளக்கப்பட்டுள்ளன. பத்தினிப் பெண்டிரின் வரலாறுகள் பல இடம் பெற்றுள்ளன. அரசியல் அறம் குறித்த செய்திகளும், ஆன்மீகச் செய்திகளும் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன. திருவிழாக்கள், பொழுது போக்குகள் முதலியனவும் விளக்கம் பெற்றுள்ளன.
சாத்தனாரின் கற்பனைத் திறன்
மணிமேகலை, சிலம்பைப் போல் கலைத்தன்மை கொண்ட நூலன்று. மாறாக, இது அறத்தன்மை கொண்ட நூல். ஆயினும், சாத்தனார் தம் கலையுணர்வையும், கற்பனை ஆற்றலையும் ஆங்காங்கே காட்டத் தவறினாரல்லர். மலர் வனம் புக்க காதையில், உவவனத்தின் அழகை விளக்குகையில், பின்வருமாறு அதனை வருணிக்கின்றார்.
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும் பிடவமும் தளவமும் முடமுள் தாழையும் குடகமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய உவ வனம். (மலர்வனம் புக்க காதை, வரிகள் : 160-169) |
இந்நூலின் ஐந்தாம் காதை, புகார் நகரத்தையும் அந்திப் பொழுதையும் வருணிக்கும் அழகே அழகு. அந்திப் பொழுதை, கணவனைப் போர்க் களத்தில் இழந்தபின், தாய்வீடு புகும் ஒரு பெண்ணோடு ஒப்பிடும் சாத்தனாரின் புனைதிறனை எண்ணி மகிழ்வோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Manimekalai - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மணிமேகலை, காதை, வரிகள், இரண்டாம், நூற்றாண்டு, சாத்தனார், உண்டு, விளக்கப்பட்டுள்ளன, தகவல்கள், தமிழ்நாட்டுத், நூல்கள், தமிழ், இலக்கிய, பெற்றுள்ளன, திறன், | , அந்திப், செய்திகளும், வனம், புகார், சாத்தனாரின், ஆங்காங்கே, புக்க, கொண்ட, பெற்ற, literatures, tamil, century, manimekalai, list, tamilnadu, பின்வருமாறு, பசியின், பாத்திரம், information, ஆபுத்திரன்