வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 91
“இல்லை, ஸம்பரனும் ஒரு மாரதன். அவனால் உபயோகிக்கப் பட்ட தங்கம் பூசிய தாமிரக் கவசம் ஒன்றை நான் சௌவீரபுரத்தில் பார்த்திருக்கிறேன். உறுதியான அந்தக் கவசத்தின் அகலத்தைக் கொண்டே அவனுடைய பரந்த மார்பை அனுமானித்துக் கொள்ளலாம். பொதுவாக அசுரர்கள் குட்டையானவர்கள். ஆனால் ஸம்பரன் வளர்ந்த ஆஜானுபாகுவானவன்; திடசரீரி. நம்முடைய இந்திரன் ஒல்லியான சரீரம் படைத்தவன். ஆனால் பராக்கிரமசாலி. இப்பொழுதுங்கூட சிந்து நதிக்கரையில் அசுரர்களுடைய சிதைந்துபோன கோட்டைகள் காணப்படுகின்றன. அதற்குள் இருந்துகொண்டு கேவலம் நூறு வில்லாளிகள் ஆயிரக்கணக்கான எதிரிகளைச் சமீபத்தில் நெருங்கவொட்டாமல் தடுக்க முடியும். உண்மையில் இந்த அசுர நகரங்கள் அயோத்தியா (அயோத்தியா, அதாவது, ஜெயிப்பதற்கு முடியாதது) வாகவே இருந்தன. இப்படிப்பட்ட வலிமை பொருந்திய அசுர நகரங்களை வெற்றி கண்ட நம்முடைய இந்திரன், இல்லை இல்லை, நம்முடைய சேனாதிபதி மகா பராக்கிரமசாலி என்பதற்குச் சந்தேகமே இல்லை.”
“நண்ப வருண! தெற்கே இப்பொழுதுங்கூட அசுரர்கள் பலம் பொருந்தியவர்களாகவே இருக்கிறார்களா?”
“இல்லை. சமுத்திரக் கரையிலிருந்த அவர்களுடைய கடைசி நகரமும் சமீபத்தில் ஜெயிக்கப்பட்டு விட்டது. அந்த யுத்தத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன்” என்று சொல்லும்பொழுது அவனுடைய பொன்னிறமான நீண்ட கூந்தலைப் பின்புறமாக ஒதுக்கிக் கொண்டே அவன்” அசுரர்களுடைய கடைசி நகரமும் விழுந்துவிட்டது” என்றான்.
“உன்னுடைய இந்திரன் யார்?”
“இந்திர பதவியை நாங்கள் எடுத்துவிட்டோம்.”
“எடுத்துவிட்டீர்களா?”
“ஆம்; தென் பிரதேச ஆரியர்களாகிய எங்களுக்கு இந்தப் பதவி, பயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.”
“பயப்படுவானேன்?”
“சேனைக்கு நாயகனையே நான் இந்திரன் என்று அழைக்கிறோமல்லவா?”
“ஆம்.”
“ஆம்; சேனாதிபதியைத் தங்களுடைய சகல காரியங்களுக்கும் நாயகனாக ஆரியர்கள் மதிப்பதில்லை. யுத்த காலத்தில் அவனுடைய உத்தரவை நாம் அப்படியே ஏற்று நடக்கிறோமென்பது உண்மையே. ஆனால் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மனம்விட்டுச் சொல்வதற்கு அதிகாரமுள்ள சமூகச் சபையைத் தான் ஆரியர்களாகிய நாம் சகலத்துக்கும் மேலானதாகக் கருதுவோம்.”
“ஆம், ஆம்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 91, புத்தகங்கள், இந்திரன், “ஆம், நம்முடைய, வால்காவிலிருந்து, பக்கம், இல்லை, கங்கை, அவனுடைய, கடைசி, அயோத்தியா, ஆரியர்களாகிய, தங்கள், நாம், அசுர, நகரமும், பராக்கிரமசாலி, நான், “இல்லை, சிறந்த, கொண்டே, அசுரர்கள், அசுரர்களுடைய, இப்பொழுதுங்கூட, சமீபத்தில்