வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 82
“சுணங்க வைப்பது நீ. வசவு கிடைப்பது எனக்கு.”
“சரி கிளம்பு. உஷாவையும் அழைத்துக் கொண்டு செல்வோம்.”
“ஹு ம், அவள் இன்னும் வீட்டில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கப் போகிறாள்.”
“சரி, உன் தக்களியைக் கொடு. இங்கே வைத்துச் செய்வோம்.”
“இதனால் யாகசாலையில் ஒன்றும் இடைஞ்சல் ஏற்படாது.”
“இந்த மாதிரி நீ செய்வதால்தான் உஷாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லை.”
“அவளுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த மங்கலபுர வாலிபர்கள் இருக்கிறீர்களே! நீங்கள் விட்டால்தானே!”
வார்த்தையாடிக் கொண்டே இரண்டு நண்பர்களும் நகருக்கு வெளியில் அமைந்திருக்கும் யாகசாலையை நோக்கி நடந்தனர். இவர்களை வழியிலே சந்தித்த யுவர்களும் யுவதிகளும், கேலிப் புன்சிரிப்போடு புருதானனை நோக்கினர். புருதானனும், தன் நண்பன் அறியாவண்ணம் அவர்களை நோக்கிக் கண்ஜாடை செய்தான். இப்படி ஒரு வாலிபன் ஜாடை காட்டிக் கேலி செய்வதைப் பார்த்து விட்ட சுமேதன் ஆத்திரத்தோடு,
“மங்கலபுரத்துக்கே இவன் ஒரு களங்கம்.”
“நண்ப, என்ன விஷயம்?”
“நண்பனாவது, கிண்பனாவது, என்னைப் பார்த்து இவன் கேலி செய்கிறான்.”
“இவன் தான் போக்கிரி என்பது உனக்குத் தெரியுமே; இவனைப் போய் பொருட்படுத்திப் பேசுகிறாயே.”
“இந்த மங்கலபுரத்தில் நல்ல மனிதர்கள் யாருமே எனக்குத் தென்படவில்லை.”
இவ்விதம் பேசிக்கொண்டே இருவரும் யாகசாலையை அடைந்தனர். யாகசாலைக்குப் பக்கத்தில் விசாலமான மைதானம். தேவதாருக்களின் இலைகளால் ஆங்காங்கு தோரணங்கள் கட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். கிராம ஜனங்கள் வந்து கூடிக்கொண்டிருந்தனர். மங்கலபுரத்தின் புரு ஜனங்கள் கொண்டாடும் இவ்விழாவிலே சுவாத நதியின் எதிர்க்கரையில் வசிக்கும் மத்ரர்களும் மாலையில் வந்து கலந்துகொள்ளும்போது, கூட்டம் ஜன சமுத்திரமாகக் காட்சியளிக்கும். நண்பர்கள் இருவரும் வருவதைப் பார்த்த உஷா சுமேதனுக்கருகில் வந்து, அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு, இளங்காதலர்களைப் போல் கொஞ்சத் தொடங்கினாள்.
“பிரிய சுமேத்! காலையிலிருந்து உன்னைத் தேடித் தேடி அலுத்து விட்டேன். காணவே முடியவில்லை.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 82, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, “சரி, கங்கை, வந்து, இருவரும், இவன், ஜனங்கள், பார்த்து, கொண்டு, சிறந்த, யாகசாலைக்குப், “இந்த, யாகசாலையை, கேலி