வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 75
இந்தச் சாமான்களையும் ஆடைகளையும் ஒட்டகம், குதிரை முதலியவைகளின் மீது ஏற்றிக் கொண்டு அடுத்த பிரதேசங்களுக்குக் கொண்டு போகிறார்கள். சாமான்களின் விலை மலிவாயிருப்பதால், ஏராளமாக விற்பனையாகின்றன. மேல் மத்ரர்களுக்கும் புருக்களுக்கும் இப்பொழுது தாமிர ஆயுதங்கள், பாத்திரங்கள் இவற்றின் தேவையும் அதிகரித்துவிட்டது. இதற்கு இரண்டு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று இந்தத் தாமிரச் சாமான்களின் விலைகள் வருஷா வருஷம் குறைந்து கொண்டே வருகின்றன. இரண்டாவது, பூமியை வெட்டுவது முதலிய வேலைகளுக்கு தாமிர ஆயுதங்கள் நாள்பட உழைக்கின்றன. இருபது வருஷங்களுக்கு முன்னே எங்கோ சில வீடுகளிலே தான் தாமிரப் பாத்திரங்களை அபூர்வமாகப் பார்க்க முடியும்! ஆனால் இப்பொழுது அந்தப் பாத்திரங்கள் இல்லாத வீடே கிடையாது. இதோடு, தங்கம், வெள்ளி நகைகள் அணிகிற பழக்கமும் அதிகமாகி விட்டது. தேவைப்படும் இந்தச் சாமான்களுக்குப் பதிலாக இவர்கள் தங்களிடமுள்ள தான்யம், கம்பளம், தோல், ஆடு மாடு, குதிரை முதலியவைகளைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இதனால் மேல் மத்ரர்கள், புருக்களுடைய வாழ்க்கை நிலைமை நாளடைவில் மோசமாகிக் கொண்டே வந்தது. தங்களைக் கீழ் மத்ரர்களும் பர்ஷுக்களும் தந்திரமாகச் சுரண்டிக்கொண்டிருப்பதாய் இவர்களில் சிலர் சந்தேகப்பட்டனர். ஆகையால் இவர்களும் வெளி உலகத்தோடு நேரே வியாபாரம் செய்ய முயற்சித்தனர். வட்சு நதிப் பிரதேசத்திலிருந்து கீழே உள்ள பிரதேசங்களுக்குப் போக வேண்டுமானால் கீழ் மத்ரர்-பர்ஷுக்களுடைய பூமியைக் கடந்துதான் போக வேண்டும். வேறு வழி கிடையாது; ஆனால் தங்கள் பிரதேசத்தைக் கடந்து
புருக்களும் மேல் மத்ரர்களும் வியாபாரத்திற்குச் செல்வதைக் கீழ்ப் பிரதேசத்தார் அனுமதிக்க விரும்பவில்லை. இதன் காரணமாகப் பலமுறை இந்த இருதரப்பாருக்கும் சிறிய சண்டைகளும் நடைபெற்றன. வெளியுலகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேறு புதுப் பாதையைக் காணவும், மேல் பகுதியார் முயன்றனர். ஆயினும் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. கீழ்ப்பகுதி யாருக்கும், மேல்பகுதியாருக்கும் நடக்கும் இந்தப் போராட்டத்திலே முக்கியமான விஷயம் என்னவென்றால் கீழ்ப்பகுதியார் தங்களுக்குள் ஐக்கியமும், ஒருமைப்பாடும் அற்றவர்களாயிருந்தார்கள். ஆனால் மேல் பகுதியாரோ, தங்களுக்குள் போட்டியும், பொறாமையும் அற்றவர்களாயிருந்ததால், ஐக்கியப்பட்டு எதிரிகளைத் தாக்க முடிந்தது.
இதுவரை நடைபெற்ற சண்டைகளில் புருகூதன், தான் காட்டிய வீரத்தாலும் திறமையினாலும், தனது சமூகத்தாரின் அன்பைப் பெற்றதோடு மட்டுமல்ல, முப்பது வயதே நிரம்பிய இளம் பிராயத்திலே சமூகத் தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 75, புத்தகங்கள், மேல், மத்ரர்களும், கொண்டு, கீழ், பக்கம், கொண்டே, கங்கை, விலை, வால்காவிலிருந்து, பாத்திரங்கள், தாமிர, ஆயுதங்கள், தான், தங்களுக்குள், வேறு, கிடையாது, இப்பொழுது, சாமான்களின், பர்ஷுக்களும், அதாவது, அடிமைகளைக், சிறந்த, குதிரை, இந்தச், அவற்றின்